துணை அமைச்சர் : 1எம்டிபி விசாரணை விவகாரத்தில், தயவுசெய்து பொறுமையாக இருங்கள்!

பிரதமர் துறையின் துணை அமைச்சர் ரசாலி இப்ராஹிம், 1எம்டிபி-இன் தொடர்ச்சியான விசாரணையில் பொறுமையுடன் இருக்குமாறு வலியுறுத்தினார். அதோடு, தனது விவாதத்தின் போது சீனச் சொல்லையும் அவர் பயன்படுத்தினார்.

“சீனர்கள்  ‘மன் மன்’ (மெதுவாக, மெதுவாக) என்பார்கள்.

“எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் விசாரணையை முடிக்கும் வரை நாம் காத்திருப்போம், ‘இன்ஷா அல்லா’ அனைத்து உண்மைகளும் நிரூபிக்கப்படும்,” என்று அவர் நேற்று இரவு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

1எம்டிபி பிரச்சனை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) விசாரிக்கப்பட்டதா என்ற, சம்சூல் இஸ்காண்டார் (பிகேஆர் – புக்கிட் காட்டில்)  கேள்விக்கு, ரசாலி இவ்வாறு பதிலளித்தார்.

1எம்டிபி பிரச்சனையை, எம்.ஏ.சி.சி. விசாரிக்கவில்லை, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு தரப்பினரின் தவறான கதை

அக்டோபர் 24-ம் தேதி, இந்த விஷயத்தை விசாரிக்குமாறு, அட்டர்னி ஜெனரல் போலிசாரை அறிவுருத்தினார் என ரசாலி விளக்கினார்.

1எம்டிபி மீதான விசாரணை வெளிநாட்டில் நடத்தப்பட்டதை ரசாலி ஒப்புக் கொண்டார், ஆனால், அது ஒரு தலைப்பட்சமாக இருந்தது என்றார்.

“அனைத்து கதைகளும் ஒரு தரப்பினர் மீது குற்றம் சுமத்துவது போல் –  ஒரு தலைப்பட்சமாக இருக்கலாம். ஆனால் , ஒரு தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட கதைகள் கூட சர்ச்சைக்கு உள்ளானவையாக உள்ளன,” என்று அவர் கூறினார்.

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட சில அதிகாரிகள், 1எம்டிபி ஊழல்களை விசாரணை செய்துள்ளனர்.

அமெரிக்க நீதித் துறை, குறைந்த பட்சம் அமெரிக்க டாலர் $ 3.5 பில்லியன், 1எம்டிபி நிதியில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில அமெரிக்காவில் சொத்துக்கள் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கருதுகிறது.