யாழில் ஆவாவுக்கு எதிராக, பல வாள் வெட்டு குழுக்கள் ; கட்டுக்குள் கொண்டுவர, விஷேட அதிரடிப் படை..

யாழில் செயற்படும் ஆவா வாள் வெட்டுக் குழு மற்றும் அக்குழுவுக்கு எதிராக சட்டவிரோதமாக செயற்படும் மேலும் பல குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க பொலிஸார் விஷேட வேலைத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ், விஷேட அதிரடிப் படையின் சிறப்புக் குழுவினரின் ஒத்துழைப்புடன் இந்த விஷேட கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த காலப்பகுதியில் யாழ் குடாவில் ஆவா குழுவின் அட்டகாசம் தலைவிரித்தடிய போது,  விஷேட நடவடிக்கைகள் ஊடாக சுமார் 25 பேர் வரையில் வாள் வெட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து வாள் வெட்டுக்கள் சற்று ஓய்ந்த போதும் மீள வாள் வெட்டுக்கள் யாழ். குடாவில் பதிவாகி வருகின்றன.

குறிப்பாக கடந்த 13 ஆம் 14 ஆம் திகதிகளில் மட்டும் யாழில் இடம்பெற்ற 6 வாள் வெட்டுச் சம்பவங்கள் காரணமாக 12 பேர் காயமடைந்தமை  குறிப்பிடத்தக்கது.

-athirvu.com

TAGS: