நஜிப்பைத் தொடர்ந்து, ஷாஹிட்டும் அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தார்

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாலம்பூர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடித்து, சிகிச்சைப் பெற்றுவரும் அன்வார் இப்ராஹிமை, துணைப் பிரதமர் அஹ்மட் ஷாஹிட் ஹமிடி இன்று சந்தித்தார்.

“வலதுபுற தோள்பட்டை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அன்வார் இப்ராஹிமை, இப்போதுதான் கோலாலம்பூர் மருத்துவமனையில் சந்தித்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும்,”என்று தனது டுவிட்டர் மற்றும் முகநூலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியோடு, அந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் பதிவேற்றியுள்ளார். அவருடன் அவரது துணைவியார் ஹமீடா காசிமும் சென்றிருந்தார்.

நேற்று, பிரதமரும் அவர்தம் துணைவியாரும் அன்வாரை மருத்துவமனையில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.