மூன்றாம் படிவ மாணவர்களில், 7 விழுக்காட்டினர் மட்டுமே தொழிற்பயிற்சியை மேற்கொள்கின்றனர்

3-ஆம் படிவம் முடித்த மாணவர்களில் 7 விழுக்காட்டினர் மட்டுமே தற்போது தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சியை (தி.வி.இ.தி.) மேற்கொள்வதாக, இன்று நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது.

தி.வி.இ.தி. மற்றும் தொழிற்சார் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில்,நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதாக துணைக் கல்வி அமைச்சர் பி.கமலநாதன் தெரிவித்தார்.

“2020-ல், நாட்டில் திறமைமிக்க மனிதவள தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் விருப்பத்தை உணர்ந்து, 2012- ஆம் ஆண்டு முதல் கல்வி அமைச்சு தி.வி.இ.தி.-யை நடைறைப்படுத்தியுள்ளது,” என்று, நூருல் இஷ்சா அன்வார் (பிகேஆர்-லெம்பா பந்தாய்) கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

கிராமப்புற மாணவர்களைத் தொழிற்பயிற்சி கல்லூரிகளில் சேர்ப்பதற்கு, பொது மக்கள், பத்திரிக்கைகள் மற்றும் வானொலியில் விளம்பரம், அரசு சாரா அமைப்புக்களின் ஒத்துழைப்பு ஆகியவற்றை அமைச்சு நாடுவதாகவும் கமலநாதன் தெரிவித்தார்.

2018-ம் ஆண்டுக்கான தி.வி.இ.தி. ஆன்லைன் விண்ணப்பம் திறக்கப்பட்டு, பல விண்ணப்பங்கள் இதுவரை பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.

கல்வி அமைச்சைத் தவிர்த்து, தி.வி.இ.தி. செயல்பாட்டில், மனிதவள அமைச்சு, உயர்க்கல்வி அமைச்சு, வேலைவாய்ப்பு அமைச்சு, இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சு, கிராமிய மற்றும் கூட்டரசுப் பிரதேச அபிவிருத்தி அமைச்சு, வேளாண்மை அமைச்சு என மேலும் 6 அமைச்சுகள் அதில் உள்ளன.