மரியா சின் : வழக்கை போலிஸ் மூடியது, குற்றச்சாட்டு பொய் என்பது நிரூபனம்

இன்று, பெர்சே 2.0 தலைவர் மரியா சின் அப்துல்லா அவருக்கு எதிரான போலிஸ் விசாரணை மூடப்பட்டதோடு, கைப்பற்றப்பட்ட அனைத்து பொருள்களும் திருப்பி அனுப்பப்பட்டது குறித்து தனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

போலிசாரே வழக்கு விசாரணை மூடியது, அக்குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“சரியாக ஓராண்டு  4 நாள்களுக்கு முன்னர், புக்கிட் அமானிலிருந்து வந்த ஒரு போலிஸ் குழுவினர், பெர்சே அலுவலகத்தைச் சோதனையிட்டனர். 10 மடிகணினிகள், 2 கைத் தொலைபேசிகள் மற்றும் சில ஆவணங்களையும் அவர்கள் கைப்பற்றி சென்றனர்.

“பின்னர் நான், சோஸ்மா சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டேன், மற்ற 14 பேரும் வெவ்வேறு குற்றச்செயல்களுக்காக, பாதுகாப்பு குற்றச்சட்டம் (சிறப்பு நடவடிக்கைகள்) கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்,” என அவர் குறிப்பிட்டார்.

“இன்று, பெர்சே 2.0 மற்றும் எனக்கு எதிரான அனைத்து விசாரணைகளையும் புக்கிட் அமான் மூடுவதாக அறிவித்துள்ளது,” என்று அவர், இன்று மாலை வெளியான ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அட்டர்னி ஜெனரலின் உத்தரவின் பேரில், அப்பொருள்கள் அனைத்தும், டாங் வாங்கி மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில், திரும்ப ஒப்படைக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.

“எனவே சோஸ்மா கீழ், நான் காவலில் வைக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை, மாறாக, அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதியை நேசிக்கும் என்னை, என் குடும்பத்தை மற்றும் மக்களைப் பயமுறுத்தும் ஒரு செயல் தான் அது.

“பெர்சே மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக வடிவமைக்கப்பட்ட அனைத்து வழக்குகளும் பொய்யானவை என்பதை இது நிரூபிக்கின்றது,” என்று அவர் கூறினார்.

நவம்பர் 18, 2016-ல், மரியா மற்றும் பெர்சே செயல் அதிகாரியான மன்டிப் சிங் கர்பால் இருவரையும், கோலாலம்பூரில் ‘பெர்சே 5’ பேரணி கூடுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன், போலீசார் கைது செய்தனர்.