‘மாஸ் விமானப் பணிபெண்கள் முக்காடு அணியும் திட்டத்தை விவாதிக்க வேண்டும்’

மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) விமானப் பணிப்பெண்கள் முக்காடு (ஹிஜாப்) அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனும் அரசாங்கத்தின் முன்மொழிவு பற்றி, பல தரப்பினர்களுடன் விவாதங்கள் நடத்தியப் பின்னரே முடிவு செய்ய முடியுமென,  மலேசிய விமானப் போக்குவரத்து தேசிய ஒன்றியம் (நூஃபாம்) இன்று தெரிவித்துள்ளது.

அதனை நடைமுறைபடுத்துவதற்கு முன்னர், பல அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது என்று நூஃபாம் ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

“ஏர்ஏசியா எக்ஸ் அல்லது மலிண்டோ ஏர் எப்படி, அந்த விமான நிறுவனங்களும் இதனைப் பின்பற்றுமா? அப்படி பின்பற்றவில்லை என்றால் என்ன செய்வது? இந்த விதிமுறையை அல்லது கொள்கையை நாம் ஒரு விமான நிறுவனத்திற்கு மட்டும் செயல்படுத்த முடியாது.

“எங்களுக்குத் தெரியும், சில விமான நிறுவனங்கள் இதை செயல்படுத்த சம்மதிக்காது, இச்செயல்முறை தங்கள் வணிகத்தைப் பாதிக்கும் என்று அவை காரணம் கூறும்.

“எல்லா விமான நிறுவனங்களும், உடனடியாக இந்த மாற்றத்தை அமல்படுத்த வேண்டுமென, அரசாங்கம் தீவிரமாக கூறினால்தான், விமான நிறுவனங்கள் அதற்கு இணங்கும்,” என்று நூஃபாம்  கூறியது.

நேற்று, மாஸ் விமானப் பணிப்பெண்கள் முக்காடு அணிவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்ற சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அஜீசின் ஆலோசனைக்குப் பின்னர், நூஃபாம் அந்த அறிக்கை வெளியிட்டது.

முக்காடு அணிவது, விமான நிறுவனத்திற்கும் பணி சூழலுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும் என்றும் நூஃபாம்  கூறியுள்ளது.

“இறுக்கமான ‘கெபாயா ‘ அல்லது இறுக்கமான பாவாடை அணிந்து கொண்டு, முக்காடு அணிய நாம் அவர்களைக் கேட்க முடியாது, அது சரியாக இருக்காது.

“முஸ்லிம் பணிப்பெண்களுக்கு, முக்காடு அணிவது நல்ல யோசனையாக இருந்தாலும், அரசாங்கம் சீருடை கொள்கைகளை மாற்றுவதற்கு விமான நிறுவனங்களைப் பணிக்கிறதா?

“விமான நிறுவனங்கள், தங்கள் சீருடைகளை மாற்ற, பணம் செலவழிக்க தயாராக உள்ளனவா?

“இந்த ஆலோசனைக்கு இன்னும் தீவிரமான விவாதங்கள் தேவைப்படுகின்றன,” என்று அது விளக்கமளித்துள்ளது.