நல்லா பல்லக்கு தூக்குகிறார் நல்லா!

வெண்கதிரன் – இந்திய வாக்காளர்களின் பேராதரவுடன் பிரதமர் நஜிப் மீண்டும் பெரிய வெற்றி பெறுவார் என்று அண்மையில் அறிக்கை வெளியிட்ட அறிக்கை அரசியல்வாதியான டான்ஸ்ரீ  நல்லா கே.எஸ்., தேசிய முன்னணிக்கு பல்லக்கு தூக்குவதில் வல்லவராகத் திகழ்கிறார்.

தவணை முறையில் வாங்கும் மானியத்திற்கும் வழங்கப்பட்டுள்ள செனட்டர் பதவிக்கும் வஞ்சகமில்லாமல் பணியாற்றுகிறார். அன்வாரை சிறுமைப் படுத்தும் விதமாகவும் நஜிப்பை பெருமைப் படுத்தும் விதமாகவும் அவ்வப்பொழுது அறிக்கைவிடும் நல்லா, அதேவேளை தன்னுடைய இருப்பையும் மலேசிய அரசியலில் வெளிப்படுத்தி வருகிறார்.

தற்பொழுது மலேசிய இந்தியர் ஐக்கியக் கட்சியின் தேசியத் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இவர், தன் கட்சியின் மாநிலத் தலைவர்களைப் பற்றியோ அல்லது மாநிலக் கிளைகளைப் பற்றியோ இதுவரை எந்தத் தகவலும் சொன்னதில்லை.

தலைநகரில்கூட தேசியப் பேராளர் மாநாட்டைக் கூட்டியதில்லை. இவர் தலைவராக இருக்கும் கட்சியின் துணைத் தலைவர், உதவித் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மத்திய நிருவாகக் குழு பற்றியோ எந்தத் தகவலும் தெரிவதில்லை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்பதால்தான் சமுதாயத்திற்கு எதுவும் தெரிவதில்லை போலும்!

அப்படி இருந்தும் இவர் மலேசிய இந்திய சமுதாயம் சார்ந்த ஒரு தேசிய இயக்கத்தைக் கட்டிக் காத்து வருகிறார் என்று பம்மாத்து புரிய முடிகிறதென்றால், இவருக்கு இருக்கும் பெரிய இடத்து சம்பந்தம்(தொடர்பு)தான் அதற்குக் காரணம்.

மற்றபடி, இந்திய சமுதாயத்திற்காக ஏதேனும் ஒரு வகையில் கடப்பாட்டுடன் செயல்படுகிறார் என்றோ, செயல் பட்டார் என்றோ சொல்வதற்கில்லை; இனியும் செயல் படுவார் என்று கருதவும் இடமில்லை. டத்தோ, டத்தோஸ்ரீ, டான்ஸ்ரீ பட்டங்களைப் பெற்றிருக்கும் இவர், ரேலா எனப்படும் தன்னார்வ காவல்-கண்காணிப்புப் படையின் துணை ஆணையராகவும் பிரதமர் துறை சார்பில் ‘கர்னல்’ ஆகவும் சிறப்பிக்கப்பட்டார்.

இதற்கெல்லாம் காரணம், தேசிய முன்னணி தலைமையின் பரம எதிரியான அன்வாரை மட்டம் தட்டிப் பேசுவதும் அறிக்கை விடுவதும்தான். அவற்றுக்கான பரிகாரம்தான் இவை அனைத்தும்.

1980-ஆம் ஆண்டுகளில் ம.இ.கா. இளைஞர் பிரிவில் இணைந்த காலத்தில் இருந்தே இவர் சமுதாய நலம் நாடுபவராகவோ மக்களுக்காக குரல் கொடுப்பவராகவோ இருந்ததில்லை. அன்வாருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர், அவருடன் ஏற்பட்ட கருத்து மோதலால் அவரிடமிருந்து நிரந்தரமாக பிரிய நேர்ந்தது.

பிரிய நேர்ந்தாலும் பழைய நட்பைப் பற்றி யெல்லாம் கருதாமல் அவரை வஞ்சம் தீர்க்க விரும்பி, தேசிய முன்னணி என்னும் அரச மரத்தை அண்டி, அதன் அடியில் செழித்து வளரும் அருகம் புல்லைப் போல இருக்கும் நல்லா, ‘நல்ல விதமாக மஞ்சள் குளிப்பதன்’ வெளிப்பாடுதான், இந்திய சமுதாயத்தின் பெரும்பான்மை ஆதரவோடு நஜிப் மீண்டும் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வார் என்று அண்மையில் தகவல் சாதனங்களில் அறிக்கை வெளியிட்டது;

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்த அன்றைய மலாயாவின் மக்கள் தொகையில், இந்திய சமுதாயம் ஏறக்குறைய 40% என்ற அளவில் இருந்தது. தோட்டத் துண்டாடல், வேலைக் கிடைக்காமல் மூன்று வேளையும் மரவள்ளிக் கிழங்கை நாடியது, குடியுரிமைச் சிக்கல், 1969 மேத் திங்கள் சம்பவம் என்றெல்லாம கட்டங்கட்டமாக தமிழர்களும் மற்ற மொழியினரும் இந்தியாவிற்கு திரும்பியதால், இன்றைய நிலையில் ஏதோ ஏழு விழுக்காடு என்ற அளவில் நம் மக்கள் தொகை நிலைத்துள்ளது.

நாடு விடுதலை அடைந்தது முதல் இதுவரை நாட்டை இடைவிடாது கட்டிக் காத்து வரும் தேசிய முன்னணி அரசு, இந்த ஏழு விழுக்காட்டு அளவிற்காவது இந்திய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பையும் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கு வந்துள்ளதா?

இதைப்பற்றி நாடாளுமன்ற மேலவையில்  என்றாவது ஒரு நாள், நல்ல கருப்பன் என்னும் நல்லா கே.எஸ். கேள்வி எழுப்பி இருப்பாரா? அட, கேள்வி எழுப்ப வேண்டாம்; ஆதங்கத்தையாவது வெளியிட்டிருப்பாரா?

இந்த நூற்றாண்டு தொடங்கிய நேரத்தில் கோடரி முத்திரைத் தைலம் என்னும் மருத்துவ தைலம் ஐந்து மில்லி லிட்டர் அளவுள்ள போத்தல் தொண்ணூறு காசுகளுக்கு விற்கப்பட்டது. இப்பொழுது மூன்று வெள்ளிக்கு மேலாக, ஆளாளுக்கு விருப்பம் போல விற்கின்றனர்.

அரசாங்க அலுவலகங்களிலும் தனியார் துறையிலும் அந்த அளவிற்கு ஊதியம் உயர்ந்து விட்டதா? நல்லா என்றாவது  நினைத்துப் பார்த்ததுண்டா?

இன்றைய நிலையில் கத்தரிக்காய் ஒரு கிலோ ஏறக்குறைய எட்டு வெள்ளிக்கு விற்கப்படுகிறது. இந்தியாவிலும் கத்தரிக்காய் ஒரு கிலோ எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் உள்ள பொருளாதார மதிப்பீட்டு வேறுபாடு எவ்வளவு? ஏன் இந்த அளவிற்கு பொருட்கள் விற்கப்படுகின்றன.

விலைவாசி ஏற்றத்தால் மக்கள் படும் அவலத்தை நல்லா, நல்ல விதமாக என்றாவது ஒரு நாள் எண்ணிப் பார்த்ததுண்டா? காலங்காலமாக இப்படியே தேசிய முன்னணிக்கும் அதன் தலைமைக்கும் ஒத்தூதி அறிக்கை விட்டும் பல்லக்கு தூக்கியுமே வாழ நல்லாவால் ஆகாது.

மக்கள் எல்லாவற்றையும் கவனித்து வருகின்றனர். நல்லாவின் அரசியல் எதிர்காலம் எத்தகையது என்பதை நாளைய இந்திய சமூகம் உறுதி செய்யும். என்ன இருந்தாலும் பல்லக்கு தூக்குவதில் நல்லாவை விஞ்ச இன்னொரு மனிதர் இல்லை.