கட்டிமுடிக்கப்படாத முகாமில் வாக்காளர்களா? இசிமீது டிஏபி பாய்ச்சல்

தேர்தல்   ஆணையம் (இசி) செகாமாட்டில்   கட்டி  முடிக்கப்படாத    ஒரு      முகாமுக்கு  இராணுவ   வாக்காளர்களை   மாற்றிவிடுவதைத்   தடுக்காததன்வழி   14வது  பொதுத்   தேர்தலில்  தங்களுக்குக்  கிடைக்க   வேண்டிய   வெற்றியைத்   தட்டி  பறித்து  விட்டது    என   டிஏபி   நாடாளுமன்றத்    தலைவர்    லிம்  கிட்  சியாங்   கூறினார்.

“ஆவி  வாக்காளர்கள்   பற்றிக்   கேள்விப்பட்டிருக்கிறோம்,   ஆனால்   ஒரு  ஆவி  இராணுவ  முகாமில்    ஆவி  வாக்காளர்கள்   இருப்பதை     இப்போதுதான்   கேள்விப்படுகிறோம்.     செகாமாட்டில்   இன்னும்   கட்டி  முடிக்கப்படாதிருக்கும்    இராணுவ   முகாமுக்கு  1.051   இராணுவ   வாக்காளர்களை   மாற்றிவிடுவது    14வது   பொதுத்   தேர்தலில்  வெற்றியைத்    ‘திருடிக்கொள்ள’   இசியும்   பிஎன்/அம்னோ   அரசாங்கமும்  மேற்கொள்ளும்   ஒரு  முயற்சி   என்பதற்கு  மறுக்கப்பட   முடியாத   சான்று”,  என்றவர்   ஓர்    அறிக்கையில்   கூறினார்.

கட்டி   முடிக்கப்படாத   முகாமுக்கு   1,051   இராணுவ   வாக்காளர்கள்   மாற்றப்பட்டிருப்பதற்கு    டிஏபி   ஆட்சேபனை   தெரிவித்து    ஆட்சேபனையை   இசி   நிராகரித்தது   குறித்து   அவர்   கருத்துரைத்தார்.

இருப்பதற்கோ   பணியாற்றுவதற்கோ   தகுதியற்ற   ஒரு   இடத்தில்   1051  பேர்   வாக்காளர்களாக   பதிவு   செய்யப்பட்டிருக்கிறார்கள்.

14வது  பொதுத்   தேர்தலில்    தோற்றுப்போகும்   அபாயமுள்ள   நாடாளுமன்றத்   தொகுதிகளைப்   பாதுகாப்பான   தொகுதிகளாக்க   அம்னோ/பிஎன்   அரசாங்கம்  இதுபோன்ற  சட்டவிரோத    செயலில்    ஈடுபடுவதாகவும்     அதற்கு   இராணுவமும்   இசியும்   துணை போயிருப்பதாகவும்    லிம்   வலியுறுத்தினார்.