திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி விலை.. இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் அதிரடி கைது

திருப்பூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்திருமாவளவனின் தலையை துண்டிப்போருக்கு ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிர்வாகி கோபிநாத் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

அம்பேத்கர் நினைவு தினம் மற்றும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 6-ஆம் தேதியை தலித் இஸ்லாமியர் எழுச்சி நாளாக கொண்டாடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்தது. அப்போது சென்னையில் ஒரு மாநாட்டையும் அக்கட்சி நடத்தியது.

அந்த மாநாட்டு கூட்டத்தில் திருமாவளவன் பேசுகையில், அயோத்தியில் ராமர் கோயில் இருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. அதனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதாக சங் பரிவார் போன்ற அமைப்புகள் கூறி வருகின்றன.

பெரும்பாலான புத்த விகார்களையும் சமண கோயில்களையும் இடித்து இந்து கோயில்கள் கட்டப்பட்டன என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக, இந்து கோயில்களை இடித்துவிட்டு புத்த விகார்களைக் கட்ட வேண்டும் என்று கூறமுடியுமா? என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழக நிர்வாகி கோபிநாத் , திருமாவளவன் தலையை வெட்டினால் ரூ.1 கோடி பரிசு அளிப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் கோபிநாத்தை கைது செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து கோபிநாத் திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.

tamil.oneindia.com

TAGS: