தமிழ்ப்பள்ளிகளைத் தரமுயர்த்தும் பணிகளுக்கு ரிம50மில்லியன் ஒதுக்கப்பட்டது- அமைச்சு

இவ்வாண்டு  கல்வி  அமைச்சு    நாட்டில்   உள்ள    தேசிய  வகை   தமிழ்ப்பள்ளிகளைத்    தரமுயர்த்தவும்  பராமரிக்கவும்   ரிம50  மில்லியனை  ஒதுக்கியதாகக்  கல்வி   அமைச்சர்   மகாட்சிர்  காலிட்     கூறினார்.

இது   தவிர   தமிழ்ப்   பள்ளிகளில்   பள்ளிகளுக்கு- முந்திய  50  வகுப்பறைகளைக்   கட்டுவதற்கு    ரிம10  மில்லியன்  கூடுதல்  ஒதுக்கீடும்   வழங்கப்பட்டுள்ளது    என்றாரவர்.

“பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   தலைமையிலான   அரசாங்கம்   இந்திய   சமூகத்தின்  கல்வியில்   அக்கறை   கொண்டிருக்கிறது.   அந்த  அக்கறை   நாட்டிலுள்ள   524   தமிழ்ப்பள்ளிகளையும்  பராமரிப்பதற்கு  ஒதுக்கப்படும்  மிகப்   பெரிய   ஒதுக்கீடுகளில்   பிரதிபலிக்கிறது.

“இப்பள்ளிகளைப்   புதுப்பிக்கவும்   தரம்  உயர்த்தவும்   2009-இலிருந்தே   நடவடிக்கைகள்   எடுக்கப்பட்டு   வந்திருக்கின்றன.  300   பள்ளிகளில்  அப்பணிகளுக்காக  2015-இலும்  2016-இலும்   ரிம66.5 மில்லியனை   அமைச்சு   ஒதுக்கியது”,  என  மகாட்சிர்   கூறினார்.     லாடாங்  லஞ்சாங்   தமிழ்ப்பள்ளியின்  புதிய  கட்டிடத்தை  ஒப்படைக்கும்   நிகழ்வில்  கலந்துகொண்ட   அமைச்சர்    செய்தியாளர்களிடம்   பேசினார்.

அந்நிகழ்வில்    கல்வி   துணை   அமைச்சர்   பி.கமலநாதன்,  லஞ்சாங்   சட்டமன்ற  உறுப்பினரும்  பகாங்       சுற்றுலா,  கலாச்சார  விவகாரங்களுக்குப்   பொறுப்பான    ஆட்சிக்குழு   உறுப்பினருமான  முகம்மட்    ஷர்க்கார்   ஷம்சுதீன்     முதலானோரும்  கலந்து  கொண்டனர்.