எம்ஏசிசி: கிளந்தான் எஃப்ஏ புரவலர் விவகாரம் தொடர்பில் அனுவார் மீது குற்றம் சாட்டப்படாது

கிளந்தான்  கால்பந்து   சங்கத்துக்குப்  பொருள் ஆதரவு   வழங்குவதற்குப்   புரவலரை ஏற்பாடு   செய்வதில்     அதிகாரத்தைத்    தவறாக   பயன்படுத்தியதாகக்  கூறப்படும்   மஜ்லிஸ்   அமனா  ரக்யாட் (மாரா)  தலைவர்   அனுவார்  மூசாமீது   எம்ஏசிசி  குற்றம்  சாட்டப்போவதில்லை.

இன்று  மலேசியாகினி    தொடர்புகொண்டபோது   எம்ஏசிசி   துணைத்   தலைவர்   அஸாம்  பாகி   இதனை   உறுதிப்படுத்தினார்.

இதற்குமுன்னதாக   சினார்  ஹராபான்   “போதுமான   ஆதாரங்களின்மையால்”   எம்ஏசிசி   அனுவார்மீது   குற்றம்  சுமத்தப்போவதில்லை   என்று   செய்தி   வெளியிட்டிருந்தது.

அவர்மீதான  புகாரைத்  தீர   விசாரித்த  பிறகு   குற்றம்   சாட்டும்   எண்ணத்தை   அரசுத்தரப்பு   கைவிட்டதாகத்    தெரிகிறது.

“இதுவரை   நாங்கள்   திரட்டிய    வாக்குமூலங்களும்   ஆதாரங்களும்    அவர்மீது  குற்றம்சாட்ட    போதுமானவை   அல்ல”,  என்று   இஸாம்    தெரிவித்தார்..

அம்னோ    தகவல்   தலைவருமான   அனுவார்,   தமக்குள்ள   அதிகாரத்தைப்  பயன்படுத்தி    பிளாபோரான்  மாரா   பெர்ஹாட்டையும்  யுனிவர்சிடி   கோலாலும்பூரையும் (யுனிகேஎல்)     கிளந்தான்  எஃப்ஏ-க்குப்  பொருள் ஆதரவு  செய்யுமாறு  கட்டாயப்படுத்தினார்  என  ஜனவரி   12-இல்   அவர்மீது  குற்றம்  சாட்டப்பட்டது.

ஜோகூர்  பட்டத்திளவரசர்   துங்கு   இஸ்மாயில்   சுல்தான்   இப்ராகிம்தான்   அவ்வாறு   குற்றம்   சுமத்தியிருந்தார்.  அதற்குச்  சான்றாக   ஆவணங்களையும்   அவர்  வெளியிட்டிருந்தார்.

குற்றச்சாட்டை      அடுத்து   கிளந்தான்   கால்பந்து   சங்க  முன்னாள்    தலைவரான   அனுவார்   மாரா   தலைவர்   பதவியிலிருந்து    இடைநீக்கம்    செய்யப்பட்டார்.

ஆனால்,  அவர்   மாரா   கிளந்தான்  கால்பந்துக்  குழுவுக்குப்  பொருள்  உதவி  செய்ததில்லை  என்பதையும்   யுனிகேஎல்  ஒரு  தனியார்   அமைப்பு    என்றும்   அது  சுயமாக   முடிவெடுக்கும்   அதிகாரம்  கொண்டது    என்பதையும்  திரும்பத்  திரும்பக்  கூறி   வந்தார்.