தொகுதிக்காக ஓயாத சண்டை! நஜிப் என்ன செய்கிறார்?

‘ஞாயிறு’ நக்கீரன், டிசம்பர் 14, 2017. தற்போதைய பதின்மூன்றாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேசிய முன்னணி சார்பில் 222 தொகுகளுக்குமான தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தொகுதிக்கான சண்டை ஓயும் போல தெரிகிறது.

தேசிய முன்னணியில் இந்திய அரசியல்வாதிகளிடம்தான் இப்படி தொகுதிக்காக சண்டையும் சச்சரவும் நீடிக்கிறதா அல்லது மலாய், சீன சமூகங்களிலும் இப்படி நடைபெறுகிறதா  என்று ஒன்றும் புரியவில்லை.

ஆனால், இந்திய சமுதாயத்தில் மிகவும் கீழ்த்தரமான முறையில் அறிக்கைப் போர் பத்திரிகைகளின் வாயிலாக தொடர்ந்த வண்ணமாக இருப்பது, இந்திய சமுதாயத் தலைவர்களிடம் அரசியல் பண்பாடும் நாகரிக முதிர்ச்சியும் இல்லவே இல்லையென்பதைப் பட்டப்பகல் சூரியனைப் போல பளிச்செனக் காட்டுகிறது.

இவர்களை கட்டியாளும் நஜிப் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அதற்கும் மேலாக, இந்த இந்தியத் தலைவர்கள் தேசிய முன்னணியின் தலைவர் என்ற வகையில் நஜிப்பை மதிக்கின்றனரா என்பதும் புலப்படவில்லை. ஒருவேளை, ஆங்கிலேய ஆட்சியாளர்கள் கற்றுத் தந்த ‘பிரித்தாளும்’ தன்மையை இந்தியத் தலைவர்களிடம் நஜிப் கூர்தீட்டிப் பார்க்கிறாரா என்பதும் விளங்கவில்லை.

எது எவ்வாறாக இருந்தாலும் கேமரன் மலைத் தொகுதிக்காக மைபிபிபி என்னும் மமுக, இந்த அளவிற்கு நாள் தவறாமல் அறிக்கைப் போர் நடத்தி அக்கப்போர் புரிவது சமூகத்தில் அலுப்பையும் சளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான நஜிப், கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறார். ஆம்; அந்தக் கட்சியின் தலைமையைப் பொருத்தமட்டில் நஜிப் வெகு அண்மையில்தான் இருக்கிறார். அவரிடம் காதும் காதும் வைத்தபடி பேசி முடித்துவிட்டு, அவரின் அறிக்கைக்காக காத்திருப்பதை விட்டுவிட்டு இப்படி நாள் தவறாமல் பத்திரிகை அறிக்கை விடுவது பண்பட்ட தலைமைக்கு பொருத்தமாக இல்லை.

அதுவும் அக்கட்சியின் தேசியத் தலைமை இன்னொரு கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைக்கு எதிராக சவால் விட்டு அறிக்கை வெளியிடுவது அத்துணைப் பொருத்தமாகப் படவில்லை. ம.இ.கா.வின் இளைஞர் பிரிவுத் தலைவரான டத்தோ ச.சிவராஜ் கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதிப் பொறுப்பாளராக அடையாளம் காணப்பட்டாலும் அவரிடம் நேராக மோதுவதைத் தவிர்த்து, அக்கட்சிட்சியின் தேசியத் தலைமையிடம் பேசுவதுதான் ஏற்றது. அதுகூட அவசியமில்லை; தே.மு. தலைவரும் பிரதமருமான நஜிப்பிடம் பேசி சுமூகமான முறையில் தீர்வு காண்பதுதான் தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகளிடையே நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவ வழி வகுக்கும்.

இதற்கான வாய்ப்புகள் அத்தனையும் இருந்தும் மமுக தலைமை ஏன் இப்படி அக்கப்போரான அரசியல் நடத்துகிறது என்றால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படியாவது ஒரு தொகுதியில் நின்று, வென்றாக வேண்டும்; முழு அமைச்சராகிவிட வேண்டும் என்ற தகிப்புதான் அதற்குக் காரணம்.

கடந்த தேர்தல்களில் புற முதுகுகாட்டி, மண்டியிட்ட பின் தற்பொழுது விழுப்புண்களைத் தடவிக் கொண்டிருக்கும் மமுக தலைமை, வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில்  எப்படியாவது களம் கண்டாக வேண்டும் என்னும் வேட்கையில் உள்ளது.

அதேவேளை, வரும் பொதுத் தேர்தலும் பெரும் சவாலாக, ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளுக்கும் போராட்டமாக அமையக்கூடும் என்ற நிலையில், மைபிபிபி தலைமை, ஒரு பாதுகாப்பான தொகுதியாக கேமரன் மலையை அடையாளம் கண்டுவிட்ட நிலையில்தான் இப்படி நெறிமுறையை மீறி மல்லுக்கு நிற்கிறது.

அது என்னவோ, இந்தத் தலைமை அந்தத் தொகுதிக்கு ‘மண்ணின் மைந்தனாம்’; இத்தொகுதி புதிதாக உதயம் கண்டபொழுதே இந்தத் தலைமைக்குத்தான் என்று ‘ஜஞ்சி’ தந்துவிட்டு, பின் ம.இ.கா.விடம் அத்தொகுதியை அக்கால தேசியத் தலைமை ஒதுக்கிவிட்டதாம். அதற்குப் பின் இவ்வளவு காலமும் தூங்கிவிட்டு, இப்பொழுதுதான் தூக்கம் கலைந்த மனிதனைப் போல, இத்தொகுதிக்கு பாத்தியப்பட்டதே தான்தான் என்ற தோரணையில் தடந்தோள் தட்டுகிறது.

அதுமட்டுமல்ல; இடையில் கூட்டரசுப் பிரதேசத் தொகுதிகளில் ஒன்றான பத்து தொகுதியிலும் தேசிய முன்னணி சார்பில் தன் வேட்பாளரை நிறுத்தப் போவதாக இதே மைபிபிபி தலைமை அறிக்கை வெளியிட்டது. குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்ப்பதைப் போன்ற அந்த செய்கைக்கு உடனே கெராக்கான் கட்சியிடம் இருந்து சுடச்சுட பதில் வந்தது. உடனே பெட்டிப்பாம்பாய் அடங்கிப்போன இந்தத் தலைமை, தற்பொழுது ஜோகூர் மாநில சட்டமன்றத்தில் ஓர் இடம் கேட்டு ஏலம் போட்டுள்ளது.

ஜோகூரில் போட்ட ஏலம் அப்படியே நிலைகுத்தி நிற்க, கேமரன்மலை மலை குறித்து மட்டும் இந்தக் காலத்தில் பெய்யும் அடாத மழையைப் போலவும் நிற்காத தூறலைப் போலவும் அறிக்கை மேல் மேல் அறிக்கைவிட்டு, சவாலுக்கு மேல் சவால் தெரிவித்து வருகிறது. ஒருவேளை, ம.இ.கா. மீது இளப்பமான பார்வை இருக்கின்றதோ என்னவோ அதுவும் தெரியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, தேசிய முன்னணி தலைமையும் ம.இ.கா.-வை வேண்டாத மருமகள் என்ற கோணத்தில் அணுகுகிறதோ என்பதும் புரியவில்லை. நேற்று முளைத்த கட்சியெல்லாம், ம.இ.கா.வை கடுமையாக விமர்சிப்பதைக் கண்டு தே.மு. தலைமை ஒன்றுக் கண்டுகொள்வதில்லை. இந்திய சமுதாய மானியம் முழுவதையும் ஒரேக் கட்சியே அபகரித்துக்  கொள்கிறது என்று ம.இ.கா.மீது சாடைப் பேச்சு பேசுகிறது மக்கள் சக்தி கட்சி; அதுவும் தலைநகரில்..!

அதுகூட மானியம்  கொடுக்கும் நஜிப் முன்னிலையிலேயே; அதற்கு மறுமொழியாக, “இதோ பார், காலங்காலமாக எங்களுடன் கை கோத்திருக்கும் தோழன் அவன்; நீ நேற்று வந்தவன்; உனக்கு என்ன வேண்டுமோ, அதைக் கேட்டுக் கொண்டு, அந்த அளவில் நிறுத்து” என்றெல்லாம் அசல்புரசலாகக்கூட தேசிய முன்னணி தலைமை மக்கள் சக்தி கட்சி தலைமையிடம் தெரிவிக்கவில்லை;

அதேவேளை, இந்தத் தலைமைகள் அத்தனையும் இந்திய சமுதாய மாணவர்களுக்கு கல்வி நிலையங்களில் வழங்க வேண்டிய உரிமையை இத்தனைக் காலமும் மற்றவர்களுக்கு மடைமாற்றிய வஞ்சகத்தை தேசிய முன்னணி தலைமை தொடர்ந்து வந்துள்ளது பற்றி அக்கறைப்படவில்லை; தொகுதிக்கும் மானியத்துக்கும்தான் இப்படி அடித்துக் கொள்கின்றன.

காலமும் சமுதாயமும் அனைத்தையும் அனுமானித்து வருகின்றன. நாளைய உலகத்தில் எல்லாவற்றுக்கும் பதில் கிடைக்காமலாப் போகும்? பொறுத்திருப்போம்.