மெக்சிகோவில் காரின் மீது துண்டிக்கப்பட்ட மனித தலைகள்

மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் வெராகுரூஸ் நகர பகுதியில் உள்ள ஒரு சாலையில் ஒதுக்குப்புறமாக ஒரு வாடகைக் கார் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் காரின் முன்புறம் என்ஜின் மூடியின் மேல், துண்டிக்கப்பட்ட 5 மனித தலைகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைக்கண்டவர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள், அந்த காருக்குள் பிளாஸ்டிக் பைகளில் துண்டிக்கப்பட்ட மனித தலைகளுக்கு உரிய உடல்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

மெக்சிகோவின் தேசிய பொது பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, வெராகுரூஸ் பகுதியில் நடக்கிற கொலைகளில் 70 சதவீத கொலைகள், அமைப்பு ரீதியிலான குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் நடத்துவதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அத்தகைய கும்பல்கள் பலவற்றை கலைத்து விட்டதாக மெக்சிகோ அரசு தரப்பில் கூறப்படுகிறது.

-dailythanthi.com