ஹராப்பான் இளைஞர் பிரிவு : ஜிஇ14-ல் வென்றால், 1 மில்லியன் வேலை வாய்ப்புகள், குறைந்தபட்ச சம்பளம் RM2,500

14-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ14), எதிர்க்கட்சி கூட்டணி புத்ராஜெயாவைக் கைப்பற்றினால், இளைஞர்களுக்கு ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதோடு; குறைந்தபட்ச சம்பளம் RM2,500-ஆக உயர்த்தப்படும் என்று பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு உறுதியளித்துள்ளது.

ஹராப்பானின் இளைஞர் துணைத் தலைவர் ஜே. அருள்குமார், பாரிசான் நேசனல் (பிஎன்) அரசாங்கம் இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, வேலை வாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டதாக கூறினார்.

“இளைஞர்களான நாங்கள், ஆற்றலுடன் இருக்கிறோம், ஆனால் பி.என். அரசாங்கத்தின் கீழ், எங்களைப் போன்றவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றோம், பொருளாதார சவால்கள் உட்பட,” என அவர் 2018- ஆம் ஆண்டு, ஹராப்பான் மாநாட்டில் இன்று பேசினார்.

நேற்று, ஜிஇ14-ல் வெற்றி பெற்றால், உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க, இளைஞர்களுக்கு உதவுவதற்காக 10 திட்டங்களை அவர்கள் முன்னெடுக்கவுள்ளதாக ஹராப்பான் இளைஞர் பிரிவு அறிவித்தது.

நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில், இளைஞர் தொழில் முனைவோர் நிதி நிறுவப்படுதல், 35 வயதுக்குக் கீழ் திருமணம் புரியும் தம்பதிகளுக்கு RM500 திருமண ஊக்கத்தொகை, புரோட்பேண்ட் விலை 50% குறைக்கப்படுதல் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் 4G தொலைத்தொடர்பு அணுகல் முறையை ஏற்படுத்துதல் போன்றவை அவற்றுள் சில.

அதோடுமட்டுமின்றி, ஒவ்வொரு மாதமும் RM100 மாதாந்த பொது போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்துதல், வெளிநாட்டு தொழிலாளர்களைப் படிப்படியாகக் குறைத்தல், தரமான வசதியுடன் கூடிய வீடு, ஒவ்வொரு மாநிலத்திலும் வேலைவாய்ப்பு மையங்களை உருவாக்குதல், வசதிகுட்பட்ட வீடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றவைகளையும் அவர்கள் அறிமுகப்படுத்த விரும்புகிறார்கள்.

மேலும், இலவச மோட்டார் சைக்கிள் லைசென்ஸ், உயர்க்கல்வி கூடங்களில் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவசக் கல்வி, பிடிபிடிஎன் கடனை அவர்கள் சம்பளம் 4,000 ரிங்கிட்டை அடைந்ததும் திருப்பிச் செலுத்துதல் போன்றவையும் அவர்களின் தேர்தல் உறுதிமொழிகளில் அடங்கும்.

இதுபற்றி மேலும் கூறுகையில், ஜிஇ14-ல் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது, காரணம் வாக்காளர்களில் 40 விழுக்காட்டினர் இளைஞர் குழுவில் உள்ளனர்.

புத்ராஜெயாவைக் கைப்பற்ற, இளம் வாக்காளர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவு ஹராப்பானுக்குத் தேவை என்று அவர் கூறினார்.

 

“இன்று பெரும்பாலான  இளைஞர்கள் மனச்சோர்வுற்று இருக்கின்றனர், எனவே இது அவர்களுக்கு உதவும் ஒரு முயற்சியாகும். 14-வது பொதுத் தேர்தலில், அரசாங்கத்தை நாங்கள் கைப்பற்ற முடியுமானால், 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் இளைஞர்களுக்கான மாற்றத்தைச் செய்ய முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.