எஸ்பிஆர் : பொதுத் தேர்தல் தேதியை முடிவுசெய்வதில், வானிலையும் ஒரு காரணி ஆகும்

14-வது பொதுத் தேர்தலை நடத்த, எல்லா நேரமும் ஏற்புடையதுதான், ஏனென்றால் தேர்தலை வெளிப்படையாக, சீராக மற்றும் பாதுகாப்பான முறையில் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) பொறுப்பேற்கிறது என்று எஸ்பிஆர் தலைவர் முகமட் ஹஷிம் அப்துல்லா சொன்னார்.

“இருப்பினும், சில சூழ்நிலைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது, உதாரணத்திற்கு வானிலை,” என்று மிங்குவான் மலேசியா சிறப்பு நேர்காணலில் அவர் தெரிவித்தார்.

14-வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை எஸ்பிஆர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டதாகவும், இருப்பினும் தேதியை உறுதி செய்வதில் வானிலையையும் கணக்கில் எடுக்க வேண்டியுள்ளதாக ஹஷிம் சொன்னார்.

“தேர்தல் சீராக நடைபெறவும், வாக்களிக்க அதிகமானோர் வெளியில் வர ஏதுவாகவும் வானிலை அமைய வேண்டும்,” என்றார் அவர்.

ஜூன் 24-ல், நாடாளுமன்றம் சுயமாகவே கலைக்கப்படும் என்பதால், 2018-ஆம் ஆண்டில் 14-வது பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும்.