ஆப்கானிஸ்தானில் சிறப்பு படை அதிரடி தாக்குதலில் 9 தலீபான் பயங்கரவாதிகள் பலி

காபூல்,

ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் இருந்து கொண்டு, தாக்குதல் நடத்துவதற்காக சதித்திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கிடைத்தன.

அதன்பேரில், நேற்று முன்தினம் இரவு அந்த பகுதிகளை சிறப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அதிரடி தாக்குதல்களை நடத்தினர். சற்றும் எதிர்பாராத வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதால், தலீபான் பயங்கரவாதிகள் நிலைகுலைந்து போயினர்.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாதிகள் பலியாகினர்.

18 பயங்கரவாதிகள் உயிருடன் பிடிபட்டனர். அவர்களில் நாசவேலைகளில் ஈடுபட்டு வந்த தளபதிகள் காரி சைபுல்லா, காரி ஜன் ஆலம், பாசல் சூகிய 3 பேரும் அடங்குவார்கள்.

இந்த தகவல்களை ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

கரம்சர் பகுதியில் அமைந்திருந்த தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன; பயங்கரவாதிகளின் வாகனங்கள் அழிக்கப்பட்டன; 6 துப்பாக்கிகள், 5 வாக்கி டாக்கி (தகவல் தொடர்பு) சாதனங்கள், 40 கண்ணிவெடிகள், ஆயிரக்கணக்கான தோட்டாக்கள், ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-dailythanthi.com