இடதுசாரி கூட்டணி 99 விழுக்காட்டினருக்கான தேர்தல் அறிக்கையைச் சமர்ப்பித்தது

மலேசிய சோசலிசக் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி, ’99 விழுக்காட்டினருக்கான தேர்தல் அறிக்கை’-ஐ இன்று வெளியிட்டது.

ஒரு வருடத்திற்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், 18 முக்கியப் பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும் இலக்கோடு, 6 கூறுகள் கொண்ட அத்தேர்தல் அறிக்கையை, இவ்வாண்டு நடைபெறவுள்ள 14-வது பொதுத் தேர்தலுக்காக இடதுசாரி கூட்டணி வெளியிட்டுள்ளது.

வளங்களை நியாயமாக விநியோகித்தல், இலவசப் பல்கலைக்கழகக் கல்வி, கண்ணியமான ஊதியம், உயர்தர வீடுகள், அரசு சிறப்பு நிதியிலிருந்து ஓய்வூதியம், உயர் தொழில்நுட்பப் பச்சை பொருளாதாரத்தை நோக்கிய மாற்றம் போன்றவை அந்த 6 கூறுகள் ஆகும்.

அந்த 18 பிரச்சனைகளும் 4 முக்கியக் கருப்பொருளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

‘மக்கள் மையப்படுத்தப்பட்ட மற்றும் நிலையான அபிவிருத்தி’ என்ற தலைப்பிலான முதல் கருப்பொருளின் கீழ், இடதுசாரி கூட்டணி முற்போக்கான பொருளாதாரக் கொள்கை, நிலையான மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான உள்கட்டுமானம் மற்றும் வட்டார  மேம்பாட்டுத் திட்டங்களை மையமாகக் கொண்டுள்ளது.

‘ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்’ என்ற கருப்பொருளின்கீழ், உண்மையான ஜனநாயகம், தகவல் சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் சட்ட விதி, இனம், பாலினம், வயது, மதம் மற்றும் பாலியல் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட சம உரிமைகள்; ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்கு எதிரான ‘பூஜ்ஜிய’ சகிப்புத்தன்மை ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

வளங்களை நியாயமாக விநியோகித்தல் எனும் கருப்பொருளின் கீழ், சமமாக நாட்டின் வளங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் விவரங்கள் அடங்கியுள்ளன.

‘மக்கள் மற்றும் கலாச்சாரம்’ என்ற கருப்பொருளின் கீழ், பெண்கள் உரிமைகள், தொலைநோக்கு மற்றும் நியாயமான கல்விகொள்கை, மேம்பட்ட பொதுச் சுகாதாரப் பாதுகாப்பு, மக்கள் மையமான சமூகக் கொள்கை, பூர்வக்குடி மக்களின் உரிமைகள் மற்றும் நிலத்திற்கான ஆதரவு, பல்வேறு கலாச்சாரக் கொள்கைகளை இடதுசாரி கூட்டணி ஆதரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடும் மற்றக் கட்சிகளும், இத்தேர்தல் அறிக்கையை நடைமுறைப்படுத்தும் என்று இடதுசாரி கூட்டணி நம்புகிறது.

“இத்தேர்தல் அறிக்கை, இனப்பாகுபாடற்ற மலேசியாவை நம்மால் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வித்திட்டுள்ளது,” என்று அக்கூட்டணி ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த இடதுசாரி கூட்டணியில் அரசியல் கட்சியான பி.எஸ்.எம்., 12 இடதுசாரி அரசு சாரா அமைப்புகள் மற்றும் தொழிலாளர் அமைப்புகள் அங்கத்துவம் பெற்றுள்ளன.