சிலாங்கூரில் திடீர் தேர்தல்?

அமனா   கட்சி   அடுத்த  பக்கத்தான்  ஹரபான்   கூட்டத்தில்   சிலாங்கூரில்  திடீர்   நடத்தும்  ஆலோசனையை  முன்வைக்கும்.

தேர்தல்  ஆணையத்தின்   தேர்தல்  தொகுதிகளைத்   திருத்தி   அமைக்கும்   நடவடிக்கைகளை  எதிர்கொள்ள  இது  நல்ல   உத்தியாக   அமையலாம்   என  சிலாங்கூர்  அமனா   தலைவர்   இஷாம்  ஹஷிம்  கூறினார்.

“இந்த   ஆலோசனையைப்    பரிசீலனைக்குக்  கொண்டு   செல்வேன்……அதன்  சாதக  பாதகங்களை   விவாதிக்க   வேண்டும்.  அதன்வழி   தேசிய   தலைமையின்  கருத்தையும்   தெரிந்து  கொள்ள  முடியும்”,  என  இஷாம்  மலேசியாகினியிடம்   தெரிவித்தார்.

தொகுதிகளைத்  திருத்தி  அமைக்கையில்  பிஎன்னுக்குச்  சாதகமாக       வாக்காளர்  பங்கீட்டில்  முறைகேடுகள்    நிகழ்வதாகவும்  வெற்றிபெறுவதற்குத்  தோதாக  தொகுதி  எல்லைகள்   நிர்ணயம்   செய்யப்படுவதாகவும்     ஹரபான்   கூறுகிறது.

தொகுதித்  திருத்த  நடவடிக்கையால்   பாதிக்கப்பட்ட    சிலாங்கூர்   அவ்விவகாரத்தை  நீதிமன்றத்துக்கும்   கொண்டு   சென்றது. பலனில்லை.

திடீர்  தேர்தல்   நடத்துவதில்  சாதகமும்  உண்டு  பாதகமும்  உண்டு   என்றார்  இஷாம்.

“தனியாக  ஒரு  மாநிலத்   தேர்தலை   நடத்தினால்  பிஎன்  அதன்  தேர்தல்  இயந்திரம்  மொத்தத்தையும்   கொண்டு  வந்து   இறக்கும்”,  என்றார்.

உத்தரவாதமில்லை

சிலாங்கூர்  பிகேஆர்  துணைத்   தலைவர்  ஸுரைடா  கமருடினுக்கும்  அதே  கவலைதான்.

”அதன்  மூலமாக    அபாயமிக்க  தேர்தல்  தொகுதித்  திருத்த  நடவடிக்கையைத்   தவிர்க்கலாம்   என்பது   உண்மையே   ஆனால்,  அது  வெற்றிக்கு   உத்தரவாதமாகாது”,  என்றாரவர்.

திடீர்  தேர்தல்  பற்றி   முன்பு   பேசப்பட்டிருக்கிறது   என்று  கூறிய   ஸுரைடா    அது  குறித்து   மேலும்   விவரிக்கவில்லை.

தேர்தல்   தொகுதி  எல்லைகள்   திருத்தப்பட்டால்கூட   சிலாங்கூரைத்   தக்க  வைத்துக்கொள்ள   முடியும்   என்ற   நம்பிக்கை   ஹரபானுக்கு  உண்டு  என்றாரவர்.

கடந்த  ஏப்ரலில்  பாஸ்   பிகேஆருடன்  உறவுகளை  முறித்துக்  கொண்டபோது  திடீர்  தேர்தல்   நடத்தும்   ஆலோசனை   வெளியிடப்பட்டது.

சிலாங்கூர்  மந்திரி  புசார்  அஸ்மின்  அலி,  பாஸ்   தொடர்ந்து  மாநில   அரசில்   இருக்கும்   என்று  கூறி   அதை   நிராகரித்து  விட்டார்.

2008-இல்   எதிரணிக்  கூட்டணியான   பக்கத்தான்  ரக்யாட்  முதன்  முறையாக   சிலாங்கூரை  வென்றது.

இப்போது,,  பிஎன்   தவிர்த்து   பாஸும்   தனது  முன்னாள்  பக்கத்தான்   தோழமைக்கட்சிகளிடமிருந்து  சிலாங்கூரைக்   கைப்பற்ற   எண்ணம்   கொண்டிருக்கிறது.