தமக்கு சம்பளம் கொடுப்பது அரசாங்கம், மக்களல்ல என்று கூறிய நவாவி, மகாதிரை தோற்கடிக்க முடியுமா?

மகாதிர் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு விட்டார். ஆனால், அவர் எந்த நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.

அவர் கண் வைத்திருக்கும் தொகுதிகளில் ஒன்று லங்காவி. அத்தீவை சுற்றுலா பயணிகளின் சொர்க்கலோகமாக மேம்படுத்தியவர் மகாதிர்.

தற்போது, லங்காவி நாடாளுமன்ற தொகுதி அம்னோவின் கோட்டை என்று கருதப்படுகிறது. அதை பிரதிநிதிப்பவர் முதல்முறை நாடாளுமன்ற உறுப்பினர் நவாவி அஹமட்.

கடந்த பொதுத் தேர்தலில் 11,861 வாக்குகள் (67 விழுக்காடு) பெற்று வெற்றி பெற்ற நவாவியிடம் மகாதிரை தோற்கடிக்க முடியுமா என்று கேட்டதற்கு, கருத்து ஏதும் இல்லை என்றார்.

“ஜெயிப்பீரா?” என்று மீண்டும் அழுத்தப்பட்ட போது, “கடவுள் கிருபையால்” என்று பதில் அளித்தார்.

மகாதிர்கூட லங்காவியைப் பாதுகாப்பான இருக்கையாக கருதவில்லை. அத்தொகுதியின் எல்லை மறுநிர்ணயம் செய்யப்படுவது மற்றும் வாக்காளர்கள் இடமாற்றம் செய்யப்படுவது போன்றவை பெர்சத்துவுக்கு அத்தொகுதி பெரும் சவாலாக இருக்கும் என்று அவர் கூறுகிறார்.

தமது பழைய தொகுதியான குபாங் பாசு அல்லது புத்ரா ஜெயாவில் போட்டியிடுவது குறித்து மகாதிர் யோசித்து வருகிறார்.

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து நவாவி பல தவறுகளைச் செய்துள்ளார். அவற்றில் தமக்குச் சம்பளம் கொடுப்பது அரசாங்கம், மக்களல்ல மற்றும் எம்ஒ1 (மலேசிய முதல் அதிகாரி) என்றால் யாங்டி பெர்த்துவான் அகோங் என்று கூறியவைகளும் அடங்கும்.