ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயார்: ரஜினி

தமிழக சட்டமன்றத்துக்கு ஆறு மாதத்துக்குள் தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தின் இறுதிநாளில், தான் நேரடி அரசியலுக்கு வரப்போவதாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்துக்கு முன்கூட்டி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது என்று டி.டி.வி.தினகரனும் கூறிவருகிறார். தினகரன் அணி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை பொறுத்தே ஆட்சியின் ஆயுள் காலம் தீர்மானிக்கப்படும் என்றும் பேசுகின்றனர்.

அடுத்த சட்டமன்ற தேர்தலை குறிவைத்துள்ள ரஜினிகாந்திடம் நிருபர்கள் நேற்று, முன்கூட்டி தேர்தல் வந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியபோது “6 மாதத்தில் தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்” என்று பதில் அளித்துள்ளார்.

-4tamilmedia.com