பாஸ் சிலாங்கூர் அரசிலிருந்து இப்போதே வெளியேற வேண்டும்

 

பாஸ் சிலாங்கூர் மாநிலத்தில் அதன் சொந்த அரசாங்கத்தை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறியிருப்பதால், அது தற்போதைய மாநில அரசிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் இது என்று சிலாங்கூர் பிகேஆர் இளைஞர் பிரிவு கூறுகிறது.

இவ்வாறான விருப்பத்தைத் தெரிவித்த பின்னர் பாஸ் தொடர்ந்து மாநில அரசின் கீழ் இருப்பது பொருத்தமா? அது கௌரவமாக மாநில அரசிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் பிரிவு. செயலாளர் சைட் பாட்லி ஷா சிஅட் ஓஸ்மான் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

அடுத்த சிலாங்கூர் மாநில அரசை அமைக்க பாஸ் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் நேற்று கூறினார். ஆனால், அக்கட்சி சிலாங்கூரில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது என்பதை அவர் கூறவில்லை.

ஹாடியின் இந்த அறிக்கை “இறுமாப்பானது” என்று கூறிய சைட் பாட்லி, சிலாங்கூர் அரசில் உருவாக்கப்பட்டிருந்த பங்காளித்துவத்திற்கு பாஸ் துரோகம் செய்து விட்டது என்றார்.