வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் எங்கே போனார்கள்?.. விஜயேந்திரருக்கு பாரதிராஜா கண்டனம்

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரருக்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடந்த சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது காஞ்சி மடத்தின் இளைய அதிபர் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். இது பெரிய சர்ச்சையை கிளப்பியது.

விஜயேந்திரரின் செயலுக்கு இயக்குனர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் ”தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்தாதவரை மன்னிக்கலாமா?. தேசிய கீதத்திற்கு மட்டும் எழுந்து நின்ற விஜயேந்திரரை மன்னிக்கலாமா? ”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ” தள்ளாத வயதிலும் தமிழ்த்தாய்க்கு மரியாதை செலுத்தியவர் பெரியார். கடவுள் எதிர்ப்பாளரான பெரியார் கூட கடவுள் வாழ்த்துக்கு எழுந்து நின்றார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ”மொழிகளில் மூத்த தமிழ் மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. வைரமுத்துவை அநாகரிகமாக பேசியவர்கள் இப்போது குரல் கொடுப்பீர்களா?” என்றுள்ளார்.

tamil.oneindia.com