காணாமல் போனோர் பணியக சட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமாம்

காணாமல் போனோர் பணியக சட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

”காணாமல் போனோர் பணியக சட்டத்துக்கு அரசாங்கம் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது நடைமுறைப்படுத்துவதற்கு தயார் நிலையில் அந்தச் சட்டம் உள்ளது.

வடக்கில் உள்ள மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்ம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.

வடக்கில் உள்ள, கணவனை இழந்த பெண்களுக்கு, தேவையான உதவிகளை வழங்கி அவர்களை வலுப்படுத்த அரசாங்கம் தயாராக இருக்கிறது.

வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தேவை என்பதையும் அரசாங்கம் அறியும்.

இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, காணாமல் போனோர் பணியக சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பல மாதங்களாகியும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னமும் சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிகளுக்குப் பொருத்தமான 7 பேரின் பெயர்கள் அரசியலமைப்புச் சபையினால் சிறிலங்கா அதிபரிடம் பரிந்துரைக்கப்பட்டு பல வாரங்களாகியும், அவர்களுக்கான நியமனங்களை வழங்காமல், அரசாங்கம் இழுத்தடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-puthinappalakai.net

TAGS: