எஜிசி ஷரியா, சிவில் சட்டத்திற்கிடையில் இணக்கம் காண ஒரு பிரிவை அமைத்துள்ளது

 

சட்டத்துறை தலைவர் அலுவலகம் (எஜிசி) ஷரியா மற்றம் (சிவில்) சட்டங்களுக்கிடையில் இணக்கம் காணும் ஒரு பிரிவை அமைத்துள்ளது. அதன் நோக்கங்களின் ஒன்று சிவில் மற்றும் ஷரியா நீதிமன்றங்களுக்கிடையிலான பிணக்கைத் தீர்த்து வைப்பதாகும்.

இந்தப் பிரிவை அமைப்பது முக்கியமாகும், ஏனென்றால் இது எஜிசிக்கு அனுப்பப்படும் ஷரியா பிரச்சனைகளுக்கான ஒரு மத்திய மையாக இருக்கும்.

சட்ட ஆலோசனை வழங்குவது, ஷரியா சட்டங்களை உருவாக்கி அவற்றை சுமுகமாகச் செயல்படச் செய்தல், ஷரியா மீது தாக்கம் ஏற்படுத்தும் அனைத்துலக ஒப்பந்தங்களை அங்கீகரித்தல் மற்றும் நீதிபரிபாலனத்தில் இரு நீதிமன்றங்களுக்கிடையில் ஏற்படும் பிணக்கை தீர்க்க சிவில் மற்றும் ஷரியா சட்டங்களுக்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்துவது இப்பிரிவின் கடமைகளில் அடங்கும் என்று எஜிசி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறது.

பெடரல் நீதிமன்றம் ஒருதலைப்பட்சமான மதமாற்றம் சம்பந்தப்பட்ட இந்திரா காந்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்த நான்கு நாள்களுக்குப் பின்னர் இந்தப் பிரிவின் அமைப்பு வந்துள்ளது.

இந்தத் தீர்ப்பின் விளைவாக, இஸ்லாத்திற்கு ஒருவர் மதமாற்றம் செய்யப்படும் விவகாரத்தில் கேள்விகள் ஏதும் எழும்புமானால் அவற்றை ஷரியா நீதிமன்றத்திற்கு மாறாக சிவில் நீதிமன்றமும்கூட விசாரிக்கலாம்.