சிறிலங்காவை பொருளாதார ரீதியாக அச்சுறுத்துகிறது சீனா – எம்.கே.நாராயணன்

சிறிலங்காவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக, சிறிலங்காவை சீனா பொருளாதார ரீதியாக அச்சுறுத்துவதாக, இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

”சீனாவுடன் போர் நடக்கும் என்று நான் கூறவில்லை. ஆனால் மோதல்கள் தொடரும். டோக்லம் விவகாரம்  தனியொரு சம்பவம் அல்ல.

இதுபோன்ற தந்திரோபாயங்கள் தொடரும். இது முடிவுக்கு வராது. சீனா இதனைத் திரும்பத் திரும்ப மேற்கொள்ளும்.

இந்தியாவின் அண்டை நாடுகளுடன் உறவுகளை வைத்துக் கொண்டு, சீனா தொந்தரவு கொடுக்க முனைகிறது.

நேபாளம், சிறிலங்கா, மாலைதீவு, பங்களாதேஸ், போன்ற இந்தியாவின் அண்டை நாடுகளை வென்றெடுப்பற்காக, சீனா பொருளாதார அச்சுறுத்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளில் முயற்சிக்கிறது.

சிறிலங்காவில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும், பாகிஸ்தானில் குவடார் துறைமுகத்தையும் சீனா எடுத்துக் கொண்டிருக்கிறது.

டிஜிபோட்டியில் கடற்படைத் தளம் ஒன்றை அமைத்துள்ளது.

இருப்பை நிலைப்படுத்தும் சீனாவின் இந்த முயற்சிகள், ஆசியாவின் இரண்டு பிரதான நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மோசமடையச் செய்யும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: