ஜெயக்குமார்: பங்குகள் இந்தியர்களுக்கு உதவாது, அதற்குப் பதிலாக வீடுகளைக் கொடுங்கள்

பங்குகளில் முதலீடு செய்ய, ஏழை இந்தியர்களிடம் பணம் இல்லை.

எனவே, பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் (பிஎன்பி) – அமானா சாஹாம் 1 மலேசியா (அ.ச.1ம.) திட்டம், ஏழை இந்தியர்களுக்கு எவ்வாறு பலனைத் தரும் என, சுங்கை சிப்புட் எம்.பி. டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார் தேவராஜ் கேள்வி எழுப்பினார்.

அத்தகைய முதலீட்டுத் திட்டங்கள், நடுத்தர மற்றும் உயர் வருமானம் பெறும் குடிமக்களுக்கு மட்டுமே உதவும் என பி.எஸ்.எம். நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு, அதற்குப் பதிலாக மற்ற வடிவங்களில் உதவி திட்டங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்றார் ஜெயக்குமார்.

“அரசாங்கம் உண்மையில் இந்தியர்களுக்கு உதவ விரும்புகிறது என்றால், அவர்கள் சொந்த வீடுகளைப் பெறுவதற்கு உதவ வேண்டும்,” என்று ஃப்.எம்.தி.-இடம் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்தாண்டு அக்டோபர் 27-ஆம் தேதி, பிரதமர் நஜிப் ரசாக் 2018-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், அ.ச.1ம. பங்கு முதலீடு பற்றி அறிவித்ததை, ஜெயக்குமார் ‘மறந்துவிட்டார்’ என ம.இ.கா. பொருளாளர் எஸ். வேல்பாரி அவரை விமர்சித்து இருந்தார்.

பிஎன்பி, இந்தியர்களுக்குக் கூடுதலாக 1.5 பில்லியன் அ.ச.1ம. பங்குகளை விநியோகிக்கும், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் 30,000 பங்குகள் வரை வழங்கப்படும் என்று நஜிப் கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி, அத்திட்டத்தில் முதலீடு செய்ய, பி40 (குடும்ப வருமானம் 40% கீழ்) பிரிவைச் சேர்ந்த 100,000 இந்தியக் குடும்பங்களுக்கு உதவி செய்ய, RM500 மில்லியன் கடன் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.

வேல்பாரி அத்திட்டத்தை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று ஜெயக்குமார் கூறினார், அ.ச.1ம. பங்குகள், ஏழைகள் மத்தியில் வறுமையை ஒழிக்க பயன்படாது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன, இது வெறும் ‘தேர்தல் கண்துடைப்பு’ என்று டாக்டர் ஜெயக்குமார் மேலும் கூறினார்.

வறுமையை ஒழிக்க பங்குகள் உதவாது

“அனைவருக்கும் தெரியும், இதற்கு முன்னமே இத்திட்டத்தை அரசாங்கம் மலாய்க்காரர்களிடம் அறிமுகம் செய்திருந்தது, ஆனால், மலாய்க்காரர்கள் மத்தியில் வறுமை இன்னும் ஒழிக்க முடியவில்லை. ஆக, வேலைக்காகாது என்று நிரூபிக்கப்பட்ட ஒரு திட்டத்தை ஏன் மீண்டும் அறிமுகம் செய்ய வேண்டும்?”

கஷானா ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் ஆராய்ச்சி இயக்குநர், முஹமட் அப்துல் காலிட், பல்வேறு சமூக – பொருளாதார வகுப்புகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுக்குப் பங்களித்த இதுபோன்ற திட்டங்களின் புள்ளிவிவரங்களை ‘கலர் ஓஃப் இன்ஈகுவாலிட்டி’  என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அப்புத்தகத்தில், 6.5 மில்லியன் மலாய் முதலீட்டாளர்களைக் கொண்டுள்ள, அமானா சஹாம் பூமிபுத்ரா (எ.எஸ்.பி) திட்டத்தில், 72% கீழ்நிலை முதலீட்டாளர்கள் சராசரியாக ரிம 554 மட்டுமே வைத்திருந்தனர். மேல்மட்ட முதலீட்டாளர்களில் 28 விழுக்காட்டினர் ரிம 53,582 மற்றும் 0.2 விழுக்காட்டினர் ரிம 725,522 வைத்திருந்ததாகவும் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

“ஆக, வறுமையிலிருக்கும் மக்களை உயர்த்துவதற்கு பங்குகள் உதவாது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

“எ.எஸ்.பி.-யின் நிலை இதுவென்றால், நீங்கள் அ.ச.1ம.-வை எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள்?”

ஏழைகளின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்ப்பது மிக முக்கியம்

ஏழை மக்களின் வீட்டுப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பது மிகவும் முக்கியம் என்று ஜெயக்குமார் கூறினார். சுங்கை சிப்புட்டில் கடந்த 60 முதல் 70 ஆண்டுகளாக, அரசாங்க நிலத்தில் தங்கியிருந்த மக்கள், புறம்போக்குவாசிகள் என்று ஒதுக்கப்பட்டுவிட்டனர் என்றார் அவர்.

“சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்திற்கு நிலப்பட்டா கொடுத்தால், அவர்கள் தங்களுடைய தற்போதைய வீடுகளிலேயே நிரந்தரமாகத் தங்கி, இருக்கும் பணத்தைத் தங்களை மேம்படுத்தி கொள்ளப் பயன்படுத்துவார்கள்.

“இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் இது பொருந்தும். நமது மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினருக்கு இது மிகப்பெரிய ஊக்கமாக இருக்கும்,” என்று மலேசிய சோசலிசக் கட்சியின் மத்தியச் செயலவை உறுப்பினருமான டாக்டர் ஜெயக்குமார் கூறினார்.