யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?

லண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த  பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின்  இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், இந்த நாட்டில் விருந்தினராக, அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

-puthinappalakai.net

TAGS: