என்எப்சி வழக்கில் ரபிசிக்கும் வங்கி அலுவலருக்கும் 30மாதச் சிறை

நேசனல் பீட்லோட்  கார்ப்பரேசன் (என்எப்சி) நிறுவனத்தின்   வங்கிக்  கணக்கு  தரவுகளை வெளியிட்ட  குற்றத்துக்காக  பாண்டான்  எம்பி  ரபிசி  ரம்லிக்கும்   பப்ளிக்  பேங்க்  முன்னாள்  அலுவலர்   ஜொஹாரி  முகம்மட்டுக்கும்   30மாதச் சிறைத்  தண்டனை    விதிக்கப்பட்டது.

அவர்கள்   வங்கி,  நிதிக்கழகச்   சட்ட(Bafia)த்தை   மீறியது   நிரூபிக்கப்பட்டிருப்பதாக   செஷன்ஸ்   நீதிமன்ற   நீதிபதி   ஜம்ரி   பக்கார்    கூறினார்.

“குற்றச்சாட்டு  பொய்யெனக்  காட்ட  எதிர்த்தரப்பு      தவறிவிட்டது. அந்த  வகையில்        குற்றச்சாட்டு   சந்தேகத்துக்கிடமின்றி  நிரூபிக்கப்பட்டிருக்கிறது”, என  நீதிபதி  கூறினார்.

மேல்முறையீட்டுக்காக   தண்டனையை  நிறுத்தி  வைக்கவும்    அவர்  இசைந்தார்.

ரபிசியும்  ஜொஹாரியும்,   2012இல்   என்எப்சி  மற்றும்  அதன்   தலைவரும்  அம்னோ  மகளிர்  தலைவர்   ஷரிசாட்   அப்துல்  ஜலிலின்  வங்கிக்  கணக்கு  விவரங்களை  வெளியிட்டார்கள்   என்பதாக  Bafia  பிரிவு   97-இன்கீழ்  குற்றம்  சாட்டப்பட்டிருந்தது.

இச்சட்டம்  2013-இல்  மீட்டுக்கொள்ளப்பட்டது,   என்றாலும்   ரபிசிமீதான  குற்றச்சாட்டு   இன்னும்  உள்ளது.