பாகோவை பெர்சத்துவிடமிருந்து கைப்பற்றுவோம்: பிரதமர் சூளுரை

நாடு   என்றும்  முற்போக்காகத் திகழ   மக்கள்,  குறிப்பாக   பெல்டா  குடியேற்றக்காரர்கள்  பிஎன்/அம்னோவைத்தான்   ஆதரிக்க   வேண்டும்  எனப்  பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்   அறிவுறுத்தினார்.

மக்கள்  தன்னைத்தானே  நம்பும்  அம்னோமீதுதான்   நம்பிக்கை  வைக்க  வேண்டுமே   தவிர   மற்ற   கட்சிகளை    அண்டிப் பிழைக்கும்   கட்சிகளை   நம்பக்  கூடாது   என  பிஎன்   தலைவரும்   அம்னோ   தலைவருமான   நஜிப்  கூறினார்.

“அம்னோ  இருக்கும்வரை  மலாய்க்காரர்  நலன்களும்  மற்ற  சமூகங்களின்  நலன்களும்  காக்கப்பட்டு  நாடு  முன்னோக்கிச்   செல்லும்.

“ஒருவர்  அம்னோ  ஆதரவுடன்  22  ஆண்டுக்காலம்  பிரதமராக  இருந்ததை   மறந்து   விட்டார்.இப்போது   அம்னோவை   அழிக்கப்   பார்க்கிறார்.  அதற்காக  டிஏபியுடன்   நட்பு  பாராட்டுகிறார்.   நட்பு  கொண்டிருப்பதுடன்  டிஏபியுடன்  கட்டியும்  புரள்கிறார்.

“அவர்கள்    டிஏபியைப்  பயன்படுத்திக்கொள்ளப்    பார்க்கிறார்கள்.  ஏனென்றால்  பார்டி  பிரிபூமி  பெர்சத்து  மலேசியா   ஒரு   கையாலாகாத  கட்சி, அது  தட்டுத்  தடுமாறிக்  கொண்டிருக்கிறது. அவர்களால்  சொந்த  காலில்  நிற்க  முடியாது,  டிஏபியைப்  பிடித்துத்  தொங்கிக்  கொண்டிருக்கிறார்கள்”,  என்றாரவர்.

நஜிப், பாகோ,  பெல்டா  திட்டமொன்றில்  ஒரு  நிகழ்வில்   கலந்துகொண்டு  பேசினார்.

14வது  பொதுத்   தேர்தலில்  அம்னோ/பிஎன்    பாகோவைத்  திரும்பக்  கைப்பற்றும்  என்றும்   அவர்  சொன்னார்.  பாகோவை  இப்போது  பெர்சத்து   தலைவர்   முகைதின்   வைத்துள்ளார்.