குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜொகூர் பாருவில் ஹராப்பான் கூட்டம் இரத்து

நேற்றிரவு, கம்போங் பாக்கார் பத்து, ஜொகூர் பாருவில் பக்காத்தான் ஹராப்பான் ஏற்பாடு செய்திருந்த கூட்டம், அவ்வட்டாரக் குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது.

ஸ்துலாங் சட்டமன்ற உறுப்பினர் எண்ட்ரு சென் கா ஏங், அம்னோ மற்றும் பிஎன்-னின் இடையூறு காரணமாக அது ஏற்பட்டது என்று கூறினார்.

“அரசாங்கம் என்ற வகையில், அம்னோ பிஎன் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, மக்களைப் பயமுறுத்தி, அவர்களை நாம் சந்திக்க முடியாமல் செய்கிறது,” என்று சென், ஒரு முகநூல் பதிவின் வழி வெளியிடப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

அவருடன், கேலாங் பாத்தா எம்.பி. லிம் கிட் சியாங், ஜொகூர் ஹராப்பான் செயலாளர் ஒஸ்மான் சப்பியான், ஜொகூர் பிகேஆர் பரப்புரை தலைவர் அக்மால் நசீர் ஆகியோர் இருந்தனர்.

அந்தப் பத்திரிக்கையாளர் கூட்டம் பதிவு செய்துகொண்டிருந்த போது, மக்கள் கோபத்தில் கத்தியதைக் கேட்க முடிந்தது.

இதுகுறித்து லிம் கிட் சியாங்கிடம் கேட்டபோது, ஜொகூர் பாரு எம்.பி. ஷாரீர் சமாட்டின் விளக்கம் கிடைக்கும் வரை, தாம் கருத்துரைக்கப் போவதில்லை என்று அவர் மறுத்துவிட்டார்.