ஜிஇ14 : பாஸ் 5 மாநிலங்களை இலக்காகக் கொண்டுள்ளது

எதிர்வரும் ஜிஇ14-ல், ஐந்து மாநிலங்களைக் கைப்பற்ற, பாஸ் இலக்குக் கொண்டுள்ளதாக அதன் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

கிளந்தானில் ஆட்சியைத் தக்கவைத்து கொள்வதோடு, திரெங்கானுவை மீண்டும் கைப்பற்றவும், புதிய இலக்காக பெர்லிஸ்-ஐயும் அதனோடு சிலாங்கூரையும் கெடாவையும் பாஸ் குறிவைத்துள்ளது.

அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் தரப்பினருக்கு ஆதரவாக இருக்க, 40 நாடாளுமன்ற இடங்களை வெல்ல வேண்டும் என்பது அக்கட்சியின் நோக்கமாகும்.

“நாம் கிளந்தான் மாநிலத்தைத் தக்கவைத்து கொள்வோம், அதோடு திரெங்கானு, கெடா, பெர்லிஸ் மற்றும் சிலாங்கூரையும் கைப்பற்ற முயற்சிக்கிறோம்,” என்று மாராங், திரெங்கானுவில், புக்கிட் பாயோங் சேவை மையத் திறப்புவிழாவில் பேசிய அவர் தெரிவித்ததாக ஹராக்கா டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரி 21-ல், சிலாங்கூர் தேர்தல் இயந்திரத் தொடக்க விழாவின் போது, சிலாங்கூரைக் கைப்பற்ற வேண்டும் எனும் தனது விருப்பத்தை ஹாடி தெரிவித்தார்.

கடந்தப் பொதுத் தேர்தலில், திரெங்கானுவில், பிகேஆர் 1 சட்டமன்றத்தை வென்றவேளை, பாஸ்-ஐ விட 3 இடங்கள் அதிகமாக, பி.என். 17 சட்டமன்றங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

திரெங்கானுவில், தற்போதைய மந்திரி பெசார் அஹ்மாட் ரஷிப் ரஹ்மான் மற்றும் முன்னாள் மந்திரி பெசார் அஹ்மாட் சைட்டுக்கும் இடையில் சில பிரச்சனைகள் எழுந்துள்ளதால், சட்டமன்றத்தைக் கிட்டதட்ட கலைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.