வான் சைபுல்: டிஏபி பற்றிய அச்சம் ஹரப்பான் நகர்ப்புற மலாய்க்காரர்களைக் கவர தடையாகவுள்ளது

பக்கத்தான்  ஹரப்பானுக்கு  நகர்ப்புற   மலாய்க்காரர்  ஆதரவைப்  பெறுவது  “பெரும்  சிரமமாக”  இருக்கும்    என்கிறார்  பிரபல   கல்விமான்  வான்  சைபுல்  வான்  ஜான்,

வான்  சைபுல்   பெர்சத்து   கட்சியில்   இணைந்து   14வது   பொதுத்   தேர்தலில்   போட்டியிடுவார்   என்று   ஊகங்கள்    தெரிவிக்கப்பட்டுவரும்    வேளையில்,   சிங்கப்பூரின்   நியு   ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸில்  வெளிவந்த   ஒரு   கட்டுரையில்    அவர்,   ஹரபான்   வெற்றி     மலாய்க்காரர்கள்  அனுபவிக்கும்     சலுகைகளுக்கு   ஆபத்தாக  முடியலாம்  என்ற    அச்சம்   வாக்காளரிடையே   நிலவுவதை   கவனப்படுத்தியுள்ளார்.

“அவர்கள்  டிஏபியை   மலாய்க்காரர்கள்   அனுபவிக்கும்   சலுகைகளை  அகற்றும்  நோக்கம்  கொண்ட     சீனர்களின்  கட்சியாகத்தான்  பார்க்கிறார்கள். அக்குற்றச்சாட்டை  டிஏபி  தொடர்ந்து   மறுத்து   வந்துள்ள   போதிலும்   அதன்மீது    நம்பிக்கையின்மை    தொடர்கிறது.

“இன்று  ஹரபானில்   அதிகமான  எம்பிகளைக்  கொண்ட   கட்சி    டிஏபி   என்பதால்   இப்படிப்பட்ட  ஒரு   தோற்றப்பாடு  நிலவுவதைப்  புரிந்துகொள்ள  முடிகிறது”,  என்றாரவர்.

தாம்   மேற்கொண்ட    ஆய்வுகளில்  நகர்ப்புற   மலாய்க்காரர்களிடையே    அடையாள   அரசியலைப்  பின்பற்றும்   போக்குத்தான்  இன்னமும்  நிலவுகிறது    என்றாரவர்.

பொருளாதாரம்,    நல்ல  நிர்வாகம்  போன்றவை   பற்றிய  கவலை   இருந்தாலும்  அடையாள  அரசியலைவிட்டு   விலக    அவர்கள்   தயாராக  இல்லை.

ஜனநாயக,  பொருளாதார  விவகாரக்  கழகம் (Ideas)  என்னும்  சிந்தனைக்  குழுவின்  கூட்டு  நிறுவுனர்களில்   ஒருவரான  வான்  சைபுல்,    அதிலிருந்து   விலகுவதாக   நேற்று   அறிவித்தார்.