கடும் போட்டியை எதிர்கொள்ளத் தயார் – மாலிம் நாவாரில் பவானி போர் முரசம்!

சிங்கத்தின் குகையில் புகுந்து அதன் பிடரியைப் பிடித்து உலுக்குவதைப் போல 70 விழுக்காட்டிற்கும் மேலாக சீன வாக்காளர்கள் நிறைந்துள்ள மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் முதல் முறையாக தேர்தல் களம் காணவுள்ளார் இளம் அரசியல்வாதியான கே. எஸ். பவானி.

மாலிம் நாவார் வட்டாரத்தில் நிலப் பிரச்சினையால்தான் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்தியக் கூட்டரசும் சரி, மாநில அரசுகளானாலும் சரி; முறையான நிலச் சட்டத்தை இதுவரை வரையறுக்கவில்லை. குறிப்பாக, புறம்போக்கு நிலங்களைப் பொறுத்தவரை அரசுகளின் நிலை என்ன என்பது இதுவரை ஒன்றும் தெரியவில்லை, புரியவில்லை.

சாதாரண மக்கள் விவசாயம் செய்ய முயன்றால் கிடைக்காத நிலம், பெரிய முதலாளிகளுக்கு மொத்தமாக எளிதாகக் கிடைப்பது எப்படி என்று வினா தொடுத்துள்ள செல்வி பவானி, மாலிம் நாவாரில் மட்டுமல்ல; இந்த சட்டமன்ற தொகுதி இடம்பெற்றுள்ள கம்பார் நாடாளுமன்றத் தொகுதி முழுவதிலுமே நிலப் பிரச்சினை ஏராளமாக உள்ளதென்று செம்பருத்தியிடம் விவரித்தார்.

பவானியின் தந்தை கன்னியப்பனும் தாய் சுப்பம்மாளும் ம.இ.கா.வின் தீவிர ஆதரவாளர்கள். 17 ஆண்டுகளுக்கு முன் கன்னியப்பன் மறைந்துவிட, தாயார் இன்றுவரை மல்லிகைப் பூ வியாபாரியாக இருக்கிறார். ஐந்து பிள்ளைகளில் நடுவில் பிறந்த பவானியும் இரு தம்பிகளும் சுப்பம்மாளுடன் வாழ்கின்றனர்.

அண்ணன் தன் குடும்பத்தோடு சிங்கையில் இருக்க, ஆசிரியை அக்காளும் தன் குடும்பத்தோடு தனியாக இருக்க, பவானி தற்பொழுது மலேசிய சோசலிசக் கட்சியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு முழுநேர அரசியல்வாதியாகி விட்டார்.

கல்வியில் சிறந்த மாணவியான பவானி, அரச நிதி உதவியில்தான் தன் முதல் பட்டப்படிப்பை உளவியல் துறையில் படித்திருக்கிறார். அப்படி, அரச நிதி உதவியுடன் அவருடன் படித்த அத்தனை மாணவர்களுக்கும்  அரசாங்க வேலை கிடைத்துவிட, ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் மட்டும் தனித்து விடப்பட்டிருக்கிறார். ஒருவேளை, அப்படி அரசாங்க வேலை கிடைத்திருந்தால், இன்று இந்த பவானியை ஒருவருக்கும் தெரியாமல் போயிருக்கலாம்.

இருந்தாலும், கம்பார் தமிழ்ப்பள்ளி மாணவியான பவானிக்கு ஆரம்பம் முதலே சமுதாய நோக்கம் இருந்திருக்கிறது. அம்மாவின் வேண்டுகோளின்படி சட்டம் படித்து வழக்கறிஞர் ஆகாமல், தேசிய பல்கலைக்கழகத்தில் உளவியல் படித்துவிட்டு பிஎஸ்எம் கட்சி மூலம் மக்கள் பணி ஆற்றிய காலக் கட்டத்தில், மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிக்கலும் சட்டம் சம்பந்தமாகவும் பெரும்பாலும் வழக்கறிஞரை நாட வேண்டியதாகவும் இருந்துள்ளது.

அப்பொழுதுதான், ஏன் நாமே வழக்கறிஞராகக்கூடாதென்று மீண்டும் வட மலேசியப் பல்கலைக்கழக்த்தில் சட்டம் படித்துள்ளார். அந்தக் காலக்கட்டத்தில்தான், இரண்டாம் ஆண்டு சட்டக் கல்வியின்போது, ஒரே நாளில் நாளில் நாடு முழுவதும் அறியப்பட்டார் பவானி.

அப்பாவின் பெயரிலும் அம்மாவின் பெயரிலும் உள்ள முதல் எழுத்துக்களை தலையெழுத்தாகக் கொண்டுள்ள பவானி, கடந்த 2013-ம் ஆண்டில் வட மலேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “பல்கலைக் கழக மாணவர்கள் அரசியலோடு நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்களா?” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு, பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அரசு இலவசக் கல்வியை வழங்க வேண்டுமென்று பேசி ஒட்டுமொத்த சமுதாயத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தார்

 

இந்தப் பின்னணியில் கடந்த 2013-ஆம் ஆண்டிலேயே தேர்தலில் இறங்கும்படி இவர் கேட்டுக் கொள்ளப்பட்டார். ‘புகழுடன் தோன்றுக’ என்னும் வள்ளுவரின் வாக்குப்படியும் முதிர்ந்த பின் வெளிப்பட்டால்தான் முத்துக்கு மதிப்பு; அவசரப்பட்டு வெளிப்பட்டால் மதிப்பிராது என்னும் கருத்தை பொதிய வைத்து ‘முதிரும் வரைக் காத்திரு’ என்ற ஈழத்துப் பாவலர் காசி ஆனந்தன் சொல்படியும் காத்திருந்த பவானி, இப்போது முதிர்ந்து – கனிந்து சமூக வெளியில்-அரசியல் களத்தில் வெளிப்பட்டிருக்கிறார்.

தேர்தலில் இறங்கினால், அந்தத் தொகுதி மக்களுக்கு ஏதாவது பணியாற்றி இருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல் படித்துக் கொண்டிருந்த நான் தேர்தலில் களம் இறங்குவது அத்துணைப் பொருத்தமில்லை என்பதால் பதின்மூன்றாவது பொதுத் தேர்தலில் பின்வாங்கிய நான், தற்பொழுது அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் முகமாக ஒரு வழக்கறிஞராகி 2016-ஆம் ஆண்டு முதல் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரியும் அதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகளாக மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதியில் முடிந்த வரை மக்கள் பணி ஆற்றி வருகிறேன்.

மலேசியாவில் என்னதான் அரசியல் முதிர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டிருந்தாலும் மலேசிய வாக்காளர்களின் உள்ளத்தில், ஆள் பார்த்தும் அணுகூலம் கருதியும் வாக்களிக்கும் எண்ணம் உள்ளது. அப்படி இருந்தும், சீன வாக்காளர்கள் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் இந்தத் தொகுதியில் என் சேவையையும் கட்சியையும் நம்பியே களம் காண்கிறேன் என்று பவானி செம்பருத்தியிடம் மனம் திறந்தார்.

போட்டி கடுமையாகத்தான் இருக்கும். சுமார் 29 விழுக்காட்டினர் மலாய் வாக்காளர்களாகவும் இந்திய வாக்கு வங்கி ஏறக்குறைய 8% என்ற அளவிலும் இருக்கும் இந்தத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மசீச-வை நாங்கள் நேருக்கு நேர் சந்தித்துதான் ஆக வெண்டும். ஆனால், எங்களைப் புறக்கணிக்கும் நம்பிக்கைக் கூட்டணி சார்பில் களமிறங்கும் ஜசெக-வை மனமின்றி எதிர்கொள்ள வேண்டியுள்ளளது. ஆனாலும், இது தவிர்க்க முடியாது என்றாகி விட்ட நிலையில் போர் வாளை உயர்த்தித்தான் ஆக வேண்டும். இல்லாவிடில களத்தில் புறமுதுகு காட்ட நேரிடும்.

எது எவ்வாறாயினும், மகாபாரதத்து ஏகலைவனைப் போல நான் வெல்வேன். ஆனாலும் ஏகலைவனைப் போல கட் டைவிரலைப் பறிகொடுக்க மாட்டேன். அடுத்தக் களத்திற்கு தேவையல்லைவா என்று போர் முரசம் கொட்டுகிறார் இந்த பவானி!

முப்பதுகளை எட்ட இருக்கும் இந்த மங்கை நல்லாள், வாழ்வின் வசந்த வாசலில் நுழைவதற்குப் பதிலாக தகதகக்கும் அரசியல் களத்தில் நிற்கிறார்.  அவரை வாழ்த்துவோம்.

-‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 1, 2018.