அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பம்

அமெரிக்காவுக்கு வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் – இடமிருந்து ஒரு தென் கொரிய தூது குழு முக்கிய செய்தியொன்றை எடுத்து செல்கிறது.

வட கொரியாவில், தென் கொரியா குழு மற்றும் கிம் இடையே நடந்த அரிதான பேச்சு வார்த்தை ஒன்றில், அமெரிக்காவுக்கு சொல்லும்படி கிம் செய்தியொன்றை பகிர்ந்ததாக,  உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த செய்தி என்ன என்று வெளியிடப்படவில்லை.

இந்த தூதுவர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திப்பார்களா என்று தெரியவில்லை.

அமெரிக்காவும், வட கொரியாவும் மேற்கொண்ட முந்தைய பேச்சுவார்த்தைகள் எந்த பலனையும் தரவில்லை.

தலைவர்கள் சந்திப்பு

ஏறத்தாழ ஒரு தசாப்தத்திற்கு பின், முதல் முறையாக வரும் ஏப்ரல் மாதம் வட கொரிய அதிபரும், தென் கொரிய அதிபரும் சந்தித்துக் கொள்ள இருக்கின்றனர். வட கொரிய அதிபராக கிம் பதவியேற்றப் பின் நடக்கும் முதல் சந்திப்பு இது.

இரண்டு நாள் பயணமாக வட கொரிய சென்ற, தென் கொரிய தேசிய பாதுகாப்பு துறையின் தலைவர் சங் இயு யாங் மற்றும் உளவு அமைப்பின் தலைவர் சன் ஹூன், வட கொரிய அதிபர் கிம்ம சந்தித்தனர். இந்த சந்திப்பு செவ்வாயிக்கிழமை நிறைவடைந்தது.

இந்த சந்திப்பின் போதுதான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தம் நாடு விரும்புவதாகவும், இந்த காலக்கட்டத்தில் அணு ஆயுத சோதனை மேற்கொள்ளமல் இருப்பதாகவும் கிம் கூறினார் என்று தென் கொரிய தேசிய பாதுகாப்பின் தலைவர் நிருபர்களிடம் கூறினார்.

“எங்களால் அனைத்தையும் ஊடகங்களிடம் தெரிவிக்க முடியாது. ஆனால், எங்களுக்கு இது குறித்து கூடுதல் பார்வை உள்ளது. அமெரிக்கா செல்லும் போது அவர்களிடம் இதனை கூறுவோம்”என்று அவர் கூறியதாக, தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் கூறி உள்ளது.

இதற்கு அமெரிக்காவின் கருத்து என்ன?

வட கொரியாவின் இந்த நகர்வை வரவேற்றுள்ள அமெரிக்க அதிபர், “இது நேர்மையான ஒன்றாக இருக்கும்” என்று தான் நம்புவதாகவும், அதே நேரம், “அவர்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை மற்றும் அவர்கள் விஷயத்தில் நாங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள்தான் காரணம்” என்றும் கூறி உள்ளார். -BBC_Tamil