தொழிலாளர்களுக்காக உணவக உரிமையாளர்கள் கெஞ்சல்!  நியாமும், அநியாயமும்!

‘ஞாயிறு’ நக்கீரன், மார்ச் 8, 2018 – மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் தங்களின் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு ஆள்பல பற்றாக்குறையால் அல்லல்படுவது, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், அந்நியத் தொழிலாளர்களை வரவழைப்பதற்காக அவர்கள் விடுக்கும் கோரிக்கையை, மத்திய தேசிய முன்னணிக் கூட்டரசு பரிசீலிக்கவில்லை!

நியாயமானது

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின்(பிரிமாஸ்) 17-ஆவது ஆண்டுப் பொதுக்கூட்டம், மார்ச் 6-ஆம் நாள், தலைநகரம் கிராண்ட் சீசன்ஸ் தங்கும் விடுதியில் நடைபெற்றபோது, அதில் தலைமையுரை ஆற்றிய பிரிமாஸ் தலைவர் முத்துசாமி திருமேனி, வெளிநாட்டுத் தொழிலாளர்களை வரவழைக்க அனுமதிக்கும்படி கெஞ்சாதக் குறையாகக் கேட்டுக் கொண்டார்.

இந்த சங்கத்தின் 16-ஆவது ஆண்டுக் கூட்டம் ஈராண்டுகளுக்கு முன் 2016, அக்டோபர் 12-ஆம் நாள் கோலாலம்பூர் நேதாஜி மண்டகத்தில் நடைபெற்ற போதும் இதே கோரிக்கையை முத்துசாமி வைத்தார். வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக் குறையால், உணவகத் தொழில் மட்டும் பாதிக்கவில்லை; முடிதிருத்தும் தொழில், தோட்டத்தொழில், உலோக மறுசுழற்சித் தொழில், சில்லறை வணிகம் உள்ளிட்ட தொழில்களும் பாதிக்கப்படுகின்றன.

அதைப்போல, இந்தியர்கள் மட்டும் என்றில்லாமல், சீன-மலாய் வர்த்தகமும் வெளிநாட்டுத் தொழிலாளர் பற்றாக் குறையால் பொதுவாக பாதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், ஆரம்பத்தில் இருந்தே அரசு தவறான பாதையைப் பின்பற்றி வருகிறது. இந்தப் பிரச்சினையில் தேவையின்றி முகவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தது பெருந்தவறு.

பொதுவாகவே, எந்தத் தொழிலை எடுத்துக் கொண்டாலும் இடைபுகுந்து கொள்ளை லாபம் அடித்து பயனடைபவர்கள் இந்த இடைத்தரகர்கள்தான்.  காய்கறியை உற்பத்தி செய்பவருக்கு கிடைக்கும் லாபம் சொற்பம்; அதை விற்கும் மொத்த-சில்லறை வியாபாரிகளுக்கு கிடைக்கும் வருமானமும் சொற்பம்தான்; ஆனால், இடைபுகுந்து விவசாயியிடம் இருந்து வாங்கி வியாபாரியிடம் கொடுக்கும் இடைத்தரகர் அடிக்கும் லாபம் அதிகமோ அதிகம்.

அதைப்போல, வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் முகவர்கள் வெளிநாட்டில் மிக அதிகமான தொகையைப் பெற்றுக் கொண்டு, இங்கு வந்ததும் வேலை பெர்மிட், மருத்துவ பரிசோதனை, லெவிக் கட்டணம் எதுவும் இல்லாமல் கடப்பிதழை மட்டும் பறித்துக் கொண்டு எவரோ ஒருவரிடம் அடிமையைப் போல விற்று விடுவர்.

அதிக விலை கொடுத்து அமர்த்திய முதலாளியும் சம்பந்தப்பட்ட தொழிலாளியிடம் முடிந்த வரை வேலை வாங்க முயற்சி செய்வது ஒரு பக்கம்; வெறுப்புடனும் சலிப்புடனும் ஏதோ பொழுது போனால் சரி என்று ஏனோதானோ மனப்பான்மையுடன் வேலை பார்க்கும் தொழிலாளிகள் மறுமக்கம் என்றால், சில வேளைகளில் அத்தொழிலாளிகள் ஓடிவிடவும் செய்கின்றனர்.

ஆனால், வெகு அண்மையில் அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. லெவியை முதலாளிகளே செலுத்த வேண்டும்; முகவர்களுக்கு இனி வேலையில்லை என்றெல்லாம் முடிவு எடுத்துள்ளது அரசு.

அநியாயம்

நமது நாட்டில் குறைந்தச் சம்பள கொள்கை படு மோசமாக உள்ளது. ஒரு மாதம் ரிமா 1,000 மட்டும்தான். இந்த நிலையில் நம்மால் உயிர் வாழ முடியுமா?. ஒரு தொழிலாளி 8 மணி நேரம் வேலை செய்தால் அவனுக்கு எளிமையான வகையில் வாழவாவது ஊதியம் போதுமானதாக இருக்க வேண்டும்.

அந்நிய தொழிலாளர்களை இறக்குமதி செய்து அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதால், அதே நிலையில் உள்நாட்டு தொழிலாளர்கள் வேலை செய்ய மறுக்கின்றனர். காரணம், கட்டுபடியாகது. அந்நிய தொழிலாளர்கள் குடும்பதுடன் இல்லை, செலவும் குறைவு, அவர்களின் நாட்டில் நிலைமை இதைவிட மோசமாக உள்ளதால் வாயைக் கட்டி வயிற்றை கட்டி பிழைப்பை ஓட்டனும் என்ற நிலைமை. அதோடு வருமானத்தை சேமித்து தாய் நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற சூழல். அதனால், அவர்கள் அந்த அடிமைத்தனத்தை சகித்து கொண்டு வாழ்கிறார்கள்.

தற்போது நமது நாட்டில் சுமார் 70 இலட்சம் அந்நிய தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 22 இலட்சம் பேர் தான் வேலை செய்வதற்கான போதிய சான்றிதல்கள் உள்ளவர்கள். ( http://www.mtuc.org.my/mtuc-calls-for-freeze-on-recruitment-of-foreign-workers-for-2-years/)

இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி போன்ற நாடுகளில், குறைந்த சம்பளம் என்பது அதிகமாகும். ஓர் ஆசிரியர், மருத்துவர் போன்றவர்களின் ஊதியத்திற்கும் தொழிலாளர்களின் ஊதியத்திற்கும் உள்ள வேறுபாடு இரண்டு அல்லது மூன்று மடங்குதான் இருக்கும். தொழிலாளர்களின் ஊதியம் என்பது வாழ்வாதரத்தை தரமாக வைத்துக் கொள்ள உகந்த வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மலேசியா செல்வம் கொழிக்கும் நாடு. நமது நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் நமது பொருளாதார கொள்கைகள் அமைய வேண்டும். அதைவிடுத்து பொருள்முதல் வாத அடிப்படையில் பேராசை கொண்டவர்களின் சுயநலத்திற்காக மக்களின் வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகிறது.

நமது நாட்டில் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகமாக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அவற்றை அமுலாக்கம் செய்ய அரசாங்காத்திற்கு ‘தில்லு’ கிடையாது. காரணம், குறைந்த சம்பள கொள்கையை கொண்டு இலாபம் தேடும் முதலாளிகள்தான் அரசாங்கத்தின் முதுகை சொறிந்து விடுபவர்கள்!

எனவே, இலாபம் தேடும் முதலாளிகளுக்கு நியாயமாக படுவது உள்நாட்டில் வாழ்வாதராத்தில் தள்ளாடும் தொழிலாளர்களுக்கு செய்யப்படும் அநியாயமாகும்!