துணைப் பிரதமரின் ரெம்பாவ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை, மசீச கூறுகிறது

 

நெகிரி செம்பிலான், ரெம்பாவில் நேற்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நெகிரி மசீச கலந்துகொள்ளவில்லை, ஏனென்றால் தங்களை யாரும் அழைக்கவில்லை என்று அது கூறிற்று.

இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தவறாக இருக்கலாம் என்று மாநில மசீச தலைவர் லிம் சின் பூய் கூறினார்.

ஸாகிட்டின் நிகழ்ச்சி பற்றி எங்களுக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை என்று கூறிய லிம், முன்பு பிரதமர் போர்ட் டிக்சன் வந்திருந்த போது எந்தப் பிரச்சனையும் இல்லை. மசீசவின் அடிமட்ட உறுப்பினர்கள் மக்களுக்கு சேவை செய்வதற்காக கடுமையாக உழைக்கிறார்கள் என்று நான் துணைப் பிரதமருக்கு உறுதியளிக்க முடியும் என்று லிம் கூறியதாக இன்று சின் சியு டெய்லி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்நிகழ்ச்சியில் இல்லாததற்காக மசீசவை ஸாகிட் கடுமையாகச் சாடினார். பிஎன்னின் இதர பங்காளிக்கட்சிகளான கெராக்கான், மஇகா மற்றும் மைபிபிபி ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

பிஎன் ஒற்றுமையைக் காப்பதற்காக அப்பகுதியில் மசீச அதன் வேட்பாளர்களை நிறுத்த வில்லை என்ற போதிலும் அவர்கள் கூட்டத்திற்கு வந்திருக்க வேண்டும் என்றாரவர்.

“எங்களுடைய வேட்பாளருக்கு உதவுங்கள். உங்களுக்கு இருக்கைகள் வேண்டும் ஆனால் எங்களுடைய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை”, என்று அவரை மேற்கொள்காட்டி பிஎன் பின்னிருக்கையர்கள் மன்றத்தின் வலைதளம் கூறுகிறது.

இதனிடையே, நெகிரி செம்பிலான் மசீசவின் வராமையை தாமே ஸாகிட்டுக்கும் நெகிரி செம்பிலான் பிஎன் தலைவர் முகம்மட் ஹசானுக்கும் விளக்கம் அளிக்கப் போவதாக லிம் கூறினார்.

லிம்மை தொடர்புகொள்வதற்காக மலேசியாகினி மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.