முற்றுகிறது மோதல் – ரஷ்ய அதிகாரிகள் வெளியேற பிரிட்டன் உத்தரவு

முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கத்தை ரஷ்யா அளிக்காததால் தங்கள் நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற பிரிட்டன் அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உளவுப் பிரிவு அதிகாரிகளின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.

பிரிட்டனில் கடந்த மார்ச் 4 அன்று மயங்கிய நிலையில் காணப்பட்டு, தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக காவல் துறை கூறியுள்ளது.

ரஷ்ய அதிகாரிகள் வெளியேற ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரீசா மே, இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரிட்டன் அரச குடும்பத்தினர் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியதற்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பகை உணர்வு கொண்டது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது, நியாயமற்றது, குறுகிய பார்வை கொண்டது என்று லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் கூறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்து போனதற்கு காரணம் பிரிட்டன் தலைவர்கள் என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது.

பிரிட்டனை ஆதரிக்கும் நேட்டோ, செர்கெய் ஸ்கிர்பால் மீதான தாக்குதல் சர்வதேச விதிமுறைகளை மீறியிருப்பதை தெளிவாக காட்டுவதாக கூறுகிறது.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக பிரிட்டன் கூறும் நோவிசோக் (novichok) நச்சு வேதிப்பொருள் பற்றி அனைத்தையும் ரஷ்யா வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. எனினும், தாங்கள் அந்தத் தாக்குதலை நடத்தவில்லை என்று ரஷ்யா மறுத்திருந்தது.

ஓய்வுபெற்ற ரஷ்ய ராணுவ அதிகாரியான செர்கெய், ஐரோப்பாவில் ரகசியமாக இயங்கும் ரஷ்ய உளவு அமைப்பினர் பற்றிய தகவல்களை பிரிட்டனுக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 2010இல் விடுவிக்கப்பட்ட அவர் பிரிட்டனில் வசித்து வந்தார். -BBC_Tamil