முஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம் என வேண்டுகோள்

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் எந்தவித பிரச்சினைகளும் நடைபெறாது இருக்கின்ற இந்நிலைமையில், அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் இலங்கை இராணுவப் படையினரை மிக அதிகளவில் குவிப்பதனால் பொதுமக்களுக்கும் இராணுவத்திற்குமிடையில் ஒரு முறுகல் நிலை தோன்றுகிறது என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.நபீஸ் தெரிவித்தார்.

கிழக்கு இராணுவ கட்டளைத்தளபதி மற்றும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாயல்களின் தலைவர், செயலாளர் மற்றும் ஊர்பிரமுகர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடல் நேற்று (08) அக்கரைப்பற்று பட்டினப்பளியில் இடம்பெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவத்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் இருக்கத்தக்கதாகவே கண்டியில் பல கடைகளும், பள்ளிகளும், வீடுகளும், வாகனங்களும் தீ இட்டும், சேதமாக்கப்பட்டும் வந்தன. அவ்வாறு அங்கு இடம்பெறுகின்றபோது இங்கே எதற்காக பாதுகாப்புப் படைகளை குவிக்கவேண்டும் என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டு கேட்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றால் அஸ்ரப் நகர், இறக்காமம் போன்ற எல்லைப் பிரதேசங்களில் இராணுவத்தை நிறுத்தி பாதுகாப்பு வழங்குவதன் மூலம் அங்குள்ள மக்களையும், அந்த வழியினூடாக ஏனைய முஸ்லிம் பிரதேசங்களுக்கு வருகின்ற சதிகாரக் கும்பலையும் தடுத்து நிறுத்த முடியும்.

அந்த முக்கியமான இடங்களை விட்டு விட்டு ஏனை முஸ்லிம் பிரதேசங்களில் இராணுவத்தினரை குவிப்பதன் மூலம் பொதுமக்களுக்கும், இராணுப் படையினருக்கும் இடையில் ஒரு முருகல் நிலைமையை மட்டும்தான் உறுவாக்கலாமே தவிற, வேறு ஒன்றையும் உறுவாக்கக் கூடிய வகையில் காணக்கூடியதாக இல்லை. என்று தெரிவித்தார்.

அவரின் கருத்தினை ஏற்றுக்கொண்டு, உடனடியாக இதனை அமுல்படுத்துவாதாக கிழக்கு இராணுவ கட்டளைத்தளபதி தெரிவித்தார்.

-tamilcnn.lk

TAGS: