அனைத்துலக சமூகம் எம்மைக் கைவிட முடியாது – சம்பந்தன்

ஜெனிவா தீர்மானத்தை சிறிலங்கா அரசு நிறைவேற்றாவிடின், அனைத்துலக சமூகம்  என்ன செய்யப்போகின்றது என்று சொல்ல வேண்டும்.  எமது மக்களை அனைத்துலக சமூகம் கைவிட்டு விட முடியாது என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்  தெரிவித்தார். 

சுழிபுரத்தில் உள்ள வலி.மேற்கு பிரதேசசபை வளாகத்தில், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவச் சிலையை நேற்று திறந்து வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

”சிறிலங்கா அதிபருக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணை  நிறைவேற்றப்பட வேண்டும்.  எமது ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது.

ஏனென்றால் சிறிலங்காஅரசாங்கம்  நாங்கள் ஒரு தீர்வைக் காணுவோம். ஒரு தீர்வை கொடுப்போம் எனக் கூறியது, ஆனால் தீர்வு இன்னும் வரவில்லை.

இன்று அனைத்துலக சமூகம் முழுமையாக எங்களுடன் நிற்கிறது.  பிராந்திய வல்லரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றது. பல நாடுகள் பல பிராந்தியங்களும் எங்களுக்கு ஆதரவு வழங்குகின்றன. ஆனால் அனைவரும் ஒன்றுகூடி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும்.

சிறிலங்கா –  இந்திய ஒப்பந்தத்தை  கைச்சாத்திட்ட பின்னர் 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. நாம் கேட்டுக்கொண்டது அதுவல்ல. ஆனாலும் முதல் முறையாக அதிகாரப் பகிர்வு மாகாணங்களின் அடிப்படையில் அரசியல் சாசனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அதற்கு முன்பதாக அதிகாரப் பகிர்வு ஒருபோதும் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதனை எங்களுடைய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டோம். அது நிரந்தரமான தீர்வல்ல. நிரந்தரமான தீர்வு இல்லாமல் இருந்தாலும்கூட ஒரு கணிசமான முன்னேற்றமாக இருந்தது.  இன்றைக்கும் அதனை நிரந்தரமானதாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இது இன்னும் மேலோங்கிச் செல்ல வேண்டும். பல கருமங்கள் திருத்தப்பட வேண்டும். 13 ஆம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் பல கருமங்கள் நாட்டில் நடைபெற்று வருகின்றன. தற்பொழுதும் இடம்பெற்று வருகின்றது.

அண்ணன் அமிர்தலிங்கத்தின் தலைமையின் கீழ் அவருடைய வழிநடத்தலின் கீழ் தந்தை செல்வாவினால் வகுக்கப்பட்ட கொள்கையின்படி நாங்கள் செய்து வருகின்ற காரியங்கள் பற்றி அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும், அறிந்துகொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த போராட்டங்களில் ஏற்பட்ட தவறுகளை நாங்கள் சிந்திக்க வேண்டியது எங்களுடைய கடமை. தந்தை செல்வா பண்டாராநாயக்கா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் மற்றும் சமஷ்டி கோரிக்கையை நாங்கள் முன்வைத்தபோதும்  எங்கள் இனத்தில் உள்ளவர்கள் எதிர்த்தார்கள்.

மக்களைச் சார்ந்து நிற்கின்ற கட்சி கொள்கைகளை முன்வைக்கின்றபோது அதை அதே இனத்தைச் சார்ந்த இன்னும் ஒரு கட்சி அல்லது இன்னுமொரு தலைமைத்துவம் எதிர்க்குமாக இருந்தால் அந்த கோரிக்கை சம்பந்தமாக ஏற்படுகின்ற பலவீனத்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பண்டாரநாயக்க- தந்தை செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை.  இவற்றை எதிர்த்த நிமித்தம் எமது கோரிக்கை எந்தளவுக்கு பலவீனம் அடைந்தது என்பதனை புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் மூலமாக அதனை நிறைவேற்றாமல் இருப்பதற்கு நாங்கள் அளித்த சந்தர்ப்பத்தை பற்றி சிந்திக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கிறது.

இத்தகைய எதிர்ப்பின் மூலம் எதனைச் சாதித்தார்கள். தமிழ் மக்களுடை ஆதரவை ஓரளவு பெற்றார்கள். ஆனால் பெற வேண்டிய வற்றுக்கு தடையாக இருந்தார்கள். அந்த நிலைமை தொடரக்கூடாது. அந்த நிலமை தொடர்ந்தால் பல இழப்புக்களை சந்திக்க வேண்டிய நிலமை ஏற்படும்.

ஒருமித்த நாட்டுக்குள் பிளவுபடாத நாட்டுக்குள் பிளவுபடுத்த முடியாத நாட்டுக்குள் எமது உள்ளக சுயநிர்ணய அடிப்படையில், எமது இறையாண்மையின் அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்கின்றோம்.

அதுதான் எமது கொள்கை. இதுதான் எமது நிலைப்பாடு. இதனை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். எவரும் இதனை மறுக்கவில்லை. ஒரு காலத்தில் தமிழீழம் தான் நிலைப்பாடு என்று கூறியவர்கள் கூட இன்று இதனை ஏற்றுக் கொள்கின்றார்கள். இதனை நாங்கள் முன்னெடுக்க வேண்டும்.

2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள்  மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 2013, 2014, 2015 ஆண்டுகளில்   தீர்மானம்  ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது மாத்திரமன்றிசிறிலங்காஅரசாங்கமும் ஏற்றுக்கொண்டது. இணை அனுசரணையாளர்களாக இருந்து ஏற்றுக்கொண்டார்கள்.

அந்தத் தீர்மானம் 2017 ஆம் ஆண்டு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதில் நாங்கள் உறுதியாக  இருக்கின்றோம். அதில் எங்களுடைய சகல சருமங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனபடியினால் அதனை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்த வேண்டும்.

அதனை நிறைவேற்றுவதற்கு 2019 ஆம் ஆண்டு , பங்குனி மாதம்வரை கால அவகாசம் இருக்கின்றது. நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு பரிபூரணமாக ஒத்துழைப்பை கொடுத்துள்ளோம்.

அதனை நிறைவேற்றாது விட்டால், அவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டும். நாங்கள் அதனை அறிய வேண்டும்.

எமது மக்களை அனைத்துலக சமூகம் கைவிட முடியாது. நாங்கள் தனி ஈழத்தைக் கேட்டோம். கைவிட்டு விட்டோம்.

30 ஆண்டு காலமாக இளைஞர்கள் ஆயுமெடுத்துப் போராடினார்கள். அது முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  30 ஆண்டு காலமாக தமிழ் இளைஞர்கள் அந்த போராட்டத்தை நடத்தினார்கள். மண்ணில், கடலில், ஆகாயத்தில் நடத்தினார்கள். அது முடிவுக்கு வந்துள்ளது.

எதற்காக போராட்டங்கள் நடத்தினோம். மக்களின் நீதிக்காக நியாயத்திற்குகாக. அனைத்துலக ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் பெறவேண்டியதை பெறுவதற்காக .

ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள அனைத்துலக பிரகடனம் எம்மை ஆட்சி புரிவதற்கு ஒரு அரசாங்கத்துக்கு எமது சம்மதம் இருக்க வேண்டும். எமது இணக்கப்பாடு இருக்க வேண்டும்.

1956 முதல் இற்றை வரை சமஷ்டி முறையில் இறைமையின் அடிப்படையில் நாங்கள் வாழ்ந்து வந்த பிரதேங்களில் சுயநிர்ண உரிமையை கேட்கின்றோம். இது அனைத்துலக சட்டத்தின்படி எமது உரிமை உரித்து.

சிவில் அரசியல் சம்பந்தமாக அனைத்துலக ஒப்பந்தம், பொருளாதார சமூக கலாச்சார விடயங்கள் சம்பந்தமான அனைத்துலக ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தத்தின் படி ஒரு மக்கள் குழாமுக்கு உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு. இதனை எவரும் முற்க முடியாது.

அவ்விதமான உள்ளக சுயநிர்ணய உரிமை அந்த மக்களுக்கு வழங்கப்படாது விட்டால் அவர்கள் அதில் இருந்து வெளியேற வேண்டிய உரித்துண்டு. இதைத்தான் நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கு தெரிவிக்கின்றோம்.

இவற்றுக்காகத் தான் தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோர் போராடினார்கள். ஒரு அடிப்படை இல்லாமல் நாங்கள் போராடவில்லை.

13 ஆம் திருத்தச் சட்டம் நிறைவேற்ப்பட்ட பிறகு ஆட்சி செய்த பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச காலத்தில் பல்வேறு கருமங்கள் நடைபெற்று வந்துள்ளன. இதற்கு மேலதிகமாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் பல கருமங்கள் நடைபெற்றுள்ளன. நடைபெற்று வருகின்றன.

அவர்களுக்கு ஆணை 2015 ஆம் ஆண்டு தை மாதத்திலும், ஆவணி மாதத்திலும் வழங்கப்பட்டுள்ளது. தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்காணும் முகமாக இது வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர்கள் காண வேண்டும். அந்த ஆணை நிறைவேற்றப்பட வேண்டும்.

இதனைச் செய்யாது விட்டால் ஆயுதப் போராட்டத்துக்கு வழிவகுக்கக் கூடாது. அனைத்துலக சமூகத்தினுடைய அனுசரணை கிடைக்க வேண்டும். எமது ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம்சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது.

ஏனென்றால்சிறிலங்காஅரசாங்கம்  நாங்கள் ஒரு தீர்வைக் காணுவோம். ஒரு தீர்வை கொடுப்போம் எனக் கூறினார்கள். ஆனால் தீர்வு இன்னும் வரவில்லை.

இன்று அனைத்துலக சமூகம் முழுமையாக எங்களுடன் நிற்கிறது. பிராந்திய வல்லரசு எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றது. பல நாடுகள் பல பிராந்தியங்களும் எங்களுக்கு ஆதரவு வழங்குகின்றது.

அனைவரும் ஒன்றுகூடி தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும். அதுதான் எங்களுடைய கோட்பாடு. இதுதான் எமது கோரிக்கை. இதில் நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

நாங்கள் பிரிந்து நிற்க முடியாது. இதில் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என்றால் எமது மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பல்வேறு கட்சிகள் பல்வேறு கருத்துக்களைக் கூறிக்கொண்டு பல்வேறு திசைகளில் சென்றால் நாங்கள் எமது குறிக்கோளை நோக்கி பயணிக்க முடியாது.

எமது மக்களுடைய பிரச்சினைகள் முடிவுக்கு வரவேண்டும். இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அடிப்படைத் தேவைகள் மேலும் அரசியல் கைதிகள் விவகாரம் காணாமற்போனோர், காணிப் பிரச்சினைகள், மீள்குடியேற்றம் இவை முடிவுக்கு வர வேண்டும்.

ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டாலும் அரசாங்கம் சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறவேண்டும். தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகளை, அநியாயங்களை சிங்கள மக்கள் மத்தியில் துணிவாகக் கூறவேண்டும்.

இதனைக்கூறி தமிழ் மக்களுக்கு நீதி, நியாயம் வழங்க வேண்டியது அவர்களுடைய கடமை. அதிலிருந்து தவறமுடியாது. தவறுமேயானால் அனைத்துலக சமூகத்திற்கு பல வாக்குறுதிகளை கொடுத்திருக்கின்றோம். சில ஒப்பந்தங்களை கொடுத்துள்ளோம். அதன் காரணமாக பல விளைவுகள் ஏற்படலாம்.

தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சிங்கள மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இந்தத் தெளிவின் மூலம், நாங்கள் எமது ஒற்றுமையின் மூலம் ஒருமித்து செயற்படுவதன் மூலம் நாமும் உறுதியான ஆதரவை கொடுத்து இக் கருமத்தை செயற்படுத்துவதற்கு வழிவகுக்க வேண்டும்” என்றார்.

-puthinappalakai.net

TAGS: