முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய நடராஜனின் மறைவு பேரிழப்பு : சீமான்

சென்னை : ஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த ம.நடராஜனின் செயல் என்றென்றும் நினைவு கூறத்தக்கத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான முறையில் இருந்த அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார்.

நடராஜனின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் செழிக்க உழைத்தவர்

அந்த அறிக்கையில், இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்கள் உடல்நலமில்லாது காலமானச் செய்திகேட்டு மனவேதனையும், பெருந்துயரமும் ஏற்பட்டுள்ளது. அரசியல் களத்தில் அவர் ஆற்றிய பணிகளும் வரலாற்றில் முக்கியமானது.

தஞ்சாவூரில் தைத்திருவிழா

ஐயா நடராசன் அவர்கள் அரசியல், இதழியல் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்களங்களில் பணியாற்றி தனி முத்திரைப் பதித்தவர். ‘புதிய பார்வை’, ‘தமிழரசி’ போன்றப் பத்திரிக்கைகளைத் திறம்பட நடத்தி இதழியல் உலகில் தனக்கெனப் பெருமைக்குரிய இடத்தை அடைந்தவர். மேலும், தமிழரசி அறக்கட்டளை என்றவொன்றினை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பலசெய்து, பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் ஐயா நடராசன் தஞ்சாவூரில் நடத்தும் ‘தைத்திருவிழா’ நிகழ்வு மிகச் சிறப்பான பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கிற பெருநிகழ்ச்சியாகும்.

ஈழப்போரின் அவலங்கள்

தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான ஈழத்தில் கடந்த 2009ம் ஆண்டு நம் தொப்புள்கொடி உறவுகள் சிங்களப் பேரினவாதக் கரங்களால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார். முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போரின் வரலாற்று நாயகர்களாக திகழ்ந்த எம்மின மாவீரர்களை காலங்காலமாய் நினைவுகூறும்வகையில் ஈழப்போரின் அவலங்களை மறக்கவே கூடாத வரலாற்று ஆவணங்களாக பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தஞ்சை விளார் சாலையில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்’ அமைத்து தமிழின வரலாற்றில் பெருமைக்குரிய தடத்தை ஐயா நடராசன் பதித்தது எக்காலமும் நினைவுகூறத்தக்கப் பெருஞ்செயலாகும்.

புகழ் வணக்கம்

எப்போதும் என் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டிருந்த ஐயா நடராசன் அவர்களின் இழப்பினை எனது தனிப்பட்ட இழப்புகளில் ஒன்றாகவே கருதுகிறேன். ஐயா ம.நடராசன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரோடு பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ச்சமூகத்தின் பேரிழப்பான ஐயா முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவின் துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கேற்று, ஐயாவுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: