நான் குதிரைச் சவாரி செய்வேன், கார் ஓட்டுவேன், உன்னையும் விரட்டுவேன், மகாதிர் கூறுகிறார்

 

தமது வயதைப் பற்றி உளறிக் கொண்டிருக்கும் பிரதமர் நஜிப்புக்கு பதில் அளித்த முன்னாள் பிரதமர் மகாதிர், 14 ஆவது பொதுத் தேர்தலில் நஜிப்பை தோற்கடிப்பேன் என்றார்.

தமது வயதைப் பற்றி பேசுகிறார்கள், 93 ஆவது வயதில் தாம் பிரதமராக முடியாது என்கிறார்கள்.

“ஆனால், 93 ஆவது வயதில், நான் இன்னும் பலவற்றை செய்ய முடியும், குதிரைச் சவாரி செய்வது, கார் ஓட்டுவது மட்டுமல்ல, நஜிப்பையும் தோற்கடிக்க முடியும். அதைச் செய்ய முடியும்”, என்று அவரது முகநூல் வீடியோவில் மகாதிர் பதிவு செய்துள்ளார்.

உலகில் எந்த நாடும் 93 வயதான ஒருவரை பிரதம மந்திரி வேட்பாளராக தேர்வு செய்யாது என்று நஜிப் ஒரு கலந்துரையாடலின் போது கூறியிருந்ததற்கு மகாதிர் எதிர்வினையாற்றினார்.

நஜிப்பை பதவியிலிருந்த அகற்ற சூளுரைத்திருக்கும் மகாதிர், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஹரப்பானுக்கு தலைமை ஏற்றிருக்கிறார்.

நஜிப் இந்த முதியவரைக் கண்டு பயப்படுகிறார் என்று நினைக்கிறேன். அதனால்தான் எனது கட்சியின் பதிவை இரத்து செய்து என்னை பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்ய முயன்று கொண்டிருக்கிறார் என்று கூறிய மகாதிர், “பயப்படாதே. ஆம், நான் வயதானவன், ஆனால் உமக்கு என்ன ஆகப்போகிறது என்று பார்ப்போம்”, என்றாரவர்.

ஒருவர் இளைஞராக இருப்பதால் ஆணவம் பிடித்தவராக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

மோசடி இல்லை என்றால், 14 ஆவது பொதுத் தேர்தலில் ஹரப்பான் வெற்றி பெற முடியும் என்று மகாதிர் மீண்டும் கூறினார்.