குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்த வலியுறுத்த வேண்டும்: ஜெனீவாவில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

‘குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம்’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்து ஆராயப்பட்ட போது, அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, “இலங்கையில் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்காக வேறு மாற்று வழிகளை நாட வேண்டும் என்ற மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாட்டை வலிமையாக வரவேற்கின்றோம். அதேசமயம், இலங்கை விடயத்தில் குற்றவியல் பொறுப்புக் கூறலை உண்மையாக நிலைநிறுத்துவதற்காக அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் அல்லது அதற்கான விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை அமைத்து, அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை மீளவும் வலியுறுத்துகின்றோம்.

இலங்கையில் யுத்தத்தின் போது மிக மோசமாக மீறப்பட்ட மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறல் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்தியே அதனடிப்படையிலேயே இலங்கை தொடர்பான இந்த விசேட தீர்மானம் இங்கு நிறை வேற்றப்பட்டது. நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மிக அவசியமான நிலைமாறு கால நீதியும், கிரிமினல் குற்றப் பொறுப்புக் கூறலும் இலங்கையைப் பொறுத்தவரை வழமையான பூகோள காலக்கிரம மீளாய்வு மூலம் எட்டப்பட முடியாதவை என்று கருதியே இந்தத் தீர்மானம் இங்கு கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

தங்களுக்கு எதிராக இன வழிப்புக் குற்றம் புரியப்பட்டிருப்பதாக விசேடமாகத் தமிழர் கருதும் நிலையில் இலங்கையில் நின்று நிலைக்கக் கூடிய உண்மையான நல்லிணக்கம் ஏற்படுவதற்கு நிலை மாறுகால நீதியும், மிக முக்கியமாக குற்றப் பொறுப்புக் கூறலும், மிகவும் அடிப்படையானவை என்பது தெளிவானது.

ஆனால், இலங்கை ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுடன் தொடர்பாடலை வெளிப்படுத்துவது வெறும் பொது நல்லுறவு தொடர்பான நடிப்பேயன்றி, பொறுப்புக் கூறல் சம்பந்தமான தனது கடப்பாட்டை நடைமுறைப்படுத்தும் நோக்கம் கொண்டல்ல என்பது இன்று இங்கு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் வாய்மூல விளக்கம் மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.” என்றுள்ளது.

-4tamilmedia.com

TAGS: