காவிரி விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதில் புதிய சிக்கல்!

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி இறுதி தீர்ப்பு கூறியது. அதில் கர்நாடகத்திற்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை ஒதுக்கீடு செய்தது.

அதே நேரத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வாரியம் அமைந்தால் காவிரி அணைகளை கட்டுப்படுத்தும் உரிமை கர்நாடக அரசுக்கு இருக்காது. இதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை எக்காரணம் கொண்டும் அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது . இது குறித்து ஆலோசனை நடத்த  4 மாநிலங்களின் உயர் அதிகாரிகள்  கூட்டம் ஒன்று  கடந்த 9 ந்தேதி நடை பெற்றது. அப்போது கர்நாடகத்தின் சார்பில் பங்கேற்ற அதிகாரிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என எழுத்துப்பூர்வ அறிக்கையும் தாக்கல் செய்தனர்.

கர்நாடக மாநில அரசின் 8 பக்க அறிக்கைக்கு தமிழக அரசு பதில் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அதில் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மேலாண்மை வாரியம் அமைப்பது தான். காவிரி வழக்கு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது காவிரி மேலாண்மை வாரியம் தான்.குறிப்பிட்டுள்ள காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தையே அமைக்க வேண்டும் என மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2 பக்க அறிக்கையில் வலியுறுத்தி உள்ளது.

இந்த் நிலையில் மத்திய அரசு  இது தொடர்பாக  சட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்கப்பட்டது. நீர் பகிட்டு குழுவில் எத்தனை  பேர் இடம் பெறுவது, சட்ட அமைச்சகம்  தமிழகம், கர்நாடகாவின் கருத்து வேறுபாட்டை நீதிமன்றமே தீர்க்க வேண்டும்.  சட்ட அமைச்சகம் தனது பரிந்துரையை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி உள்ளது.

இதனால்   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  புதிய சிக்கல் ஏற்பட்டு உள்ளது. காவிரி தீர்ப்பில் விளக்கம் கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும்  தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள செயல்திட்டம் என்ன என்பதை விளக்க மத்திய அரசு கோரிக்கை எழுப்ப இருப்பதாகவும்   இன்னும் 2 நாட்களில் இந்த மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும்  தகவல்  வெளியாகி உள்ளது.

இன்று மாலை நடைபெறும்  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் வாரியம் பற்றி முடிவெடுக்க வாய்ப்பில்லை என தகவல்  வெளியாகி உள்ளது.

-dailythanthi.com

TAGS: