பணிப் பெண்ணை கொடுமைப்படுத்திய டத்தினுக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை

 

தமது பணிப் பெண்ணை கொடுமைப் படுத்திய ஒரு டத்தின் குற்றவாளி என்று தீர்ப்பளித்த செசன்ஸ் நீதிமன்றம் அவருக்கு நன்னடத்தை பிணை வழங்கியிருந்தது. உயர் நீதிமன்றம் அத்தீர்ப்பை மாற்றி அவருக்கு 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

அத்தீர்ப்பை மறுஆய்வு செய்த நீதி ஆணையர் துன் மஜிட் துன் ஹம்ஸா செசன்ஸ் நீதிமன்றம் தவறு இழைத்துவிட்டதாகக் கூறினார்.

நீதி ஆணையர் துன் மஜிட் குற்றவாளி ரோஸிட்டா முகமட் அலிக்கு, 44, 8 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து அது இன்றைய தினத்திலிருந்து தொடங்க உத்தரவிட்டார்.

மேலும், மேல்முறையீடு செய்ய அவரது தண்டனையை நிறுத்தி வைக்க விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்தார்.

கடந்த மார்ச் 15 இல், 19 வயதான சுயந்தி சுடிரின்சோவுக்கு கடும் காயம் விளைவித்த குற்றத்தை ரோஸிட்டா ஒப்புக்கொண்டார். அவருக்கு நீதிபதி முகம்மட் மோக்ஸானி மொக்தார் ரிம20,000 நன்னடத்தை பிணையை ஐந்து ஆண்டுகளுக்கு தண்டனையாக விதித்தார்.

இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உடனடியாக, அரசு தரப்பு மேல்முறையீடு செய்தது.