சிறுவர்களை கொண்டு பயங்கரவாதிகள் படை அமைக்க முயற்சி..

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனை சேர்ந்தவர், உமர் அகமது ஹக் (வயது 25).  இவர் முறையாகப் பயிற்சி பெறாமலேயே, மதப்பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் சிறுவர்களுக்கு பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய வீடியோ படம் காட்டி அவர்களை பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு மூளைச் சலவை செய்து உள்ளார்.

அது மட்டுமின்றி, லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு அவர்களைக் கொண்டு ஒரு படையை அமைக்கவும் அவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவருடன் அவரது கூட்டாளிகள் அபுதாகீர் மாமுன் (29), முகமது அபித் (27) ஆகியோரும் சிக்கினர்.

அவர்கள் மீது அங்கு பழைய பெய்லே கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது அவர்கள் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து உமர் அகமது ஹக்குக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அவருடைய கூட்டாளிகளான அபுதாகீர் மாமுனுக்கு 13 ஆண்டுகளும், முகமது அபித்துக்கு 4 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

-athirvu.com