மகாதிரை எதிர்கொள்ள பயமில்லையாம், குபாங் பாசு எம்பி கூறுகிறார்

 

14 ஆவது பொதுத் தேர்தலில் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் குபாங் பாசு தொகுதியில் போட்டியிட வந்தால், தாம் அவரை எதிர்கொள்ள அஞ்சவில்லை என்று குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஜொகாரி பஹாரும் கூறுகிரார்.

தமக்கு மகாதிரை நன்கு தெரியும், ஏனென்றால் மகாதிர் பிரதமராக இருந்த போது தாம் அவரது அரசியல் செயலாளராக இருந்ததாகவும், தாம் அவரை ஒரு சாதாரண மனிதராகக் கருதுவதாகவும் துணை தற்காப்பு அமைச்சருமான ஜொஹாரி கூறினார்.

அவரை எதிர்கொள்ள பயப்படவில்லை. முன்பு அவர் சக்தி வாய்ந்தவராக இருந்தார், ஏனெனில் அவருக்கு அம்னோ ஆதரவு இருந்தது. பலமாக இருப்பது அம்னோ. இப்போது அவர் சாதனை எதுவுமே படைக்காத மற்றோர் கட்சியில் இருக்கிற வேளையில் அம்னோ இன்னும் பலமானதாக இருக்கிறது என்றாரவர்.

மக்கள் அவரை பெரிய மனிதராக பார்க்கிறார்கள், ஏனென்றால் அவர் கேஎல்சிசி மற்றும் கேஎல்எ போன்ற பெரும் திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். ஆனால் அம்னோவும் அதன் இதர கடந்தகால தலைவர்களின் செயல்களும் இல்லாமல், அவர் ஒரு சாதாரணமானவர்தான் என்று மூவாரில் இன்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஜொஹாரி கூறினார்.

1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது பொதுத் தேர்தலில் குபாங் பாசு நாடாளுமன்ற உறுப்பினரான மகாதிர் 2004 ஆண்டு வரையில் அங்கு சேவையாற்றியுள்ளார். ஜொஹாரி 11 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் நடந்த இரு பொதுத் தேர்தல்களிலும் தமது இருக்கையைத் தற்காத்துக் கொண்டார்.