ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் நாளை இந்தியா வருகை..

ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 பேரும் இந்தியாவின் பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈராக்கின் மோசூல் நகரில் பணியாற்றி வந்தனர்.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே கடந்த 2014-ம் ஆண்டு உச்சக்கட்டப் போர் வெடித்தபோது அங்குள்ள மோசூல் நகரை விட்டு வெளியேற முயன்ற 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

அவர்களை மீட்க இந்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வந்த நிலையில், 39 பேரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் 20-ம் தேதி பாராளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்தார்.

இறந்தவர்களின் உடல்கள் ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கே டி.என்.ஏ. சோதனை செய்யப்பட்டது. சோதனையின் முடிவில் 38 பேரின் டி.என்.ஏ. காணாமல் போன இந்தியர்களின் டி.என்.ஏ.வை ஒத்துள்ளது. ஒருவரின் டி.என்.ஏ. 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ளது.

வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் விரைவில் ஈராக் சென்று கொல்லப்பட்ட இந்தியர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்வார் என சுஷ்மா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், டி.என்.ஏ. மாதிரி 70 சதவீதம் மட்டுமே ஒத்துள்ள ஒரு இந்தியரை தவிர மீதமுள்ள 38 இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் இன்று ஈராக் நாட்டில் உள்ள மோசூல் நகருக்கு புறப்பட்டு சென்றார்.

இறந்தவர்களில் 27 பேர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் உடல்களை ஏற்றிவரும் விமானம் முதலில் பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரஸ் நகரை நாளை பிற்பகல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், நாளை மாலைக்குள் கொல்கத்தா மற்றும் பாட்னா விமான நிலையங்களில் மற்றவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் உரிய சான்றிதழ்களுடன் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.

-athirvu.com

TAGS: