சல்மான் சிறை: மானை வணங்கும் சமூகத்தில் கொண்டாட்டம்

கலை மானை வேட்டையாடிய வழக்கில் இந்தி நடிகர் சல்மான் கானை சிறையில் அடைத்திருக்கும் ஜோத்பூரில் நீதிமன்றத்தின் தீர்ப்பை, அம்மாநிலத்தில் உள்ள ஃபதேகாபாத் மாவட்டத்தில் வசிக்கும் விஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஃபதேகாபாத் மாவட்டத்தின் சுமார் 20 கிராமங்களில் பெரும்பான்மையாக வாழும் இந்த சமூக மக்கள் இயற்கையை பெரிதும் நேசிப்பவர்கள். அந்த கிராமங்களில் சுமார் 50,000 விஷ்னோய் சமூகத்தினர் வசிக்கின்றனர்.

ஃபதேகாபாத்தில் உள்ள விஷ்னோய் கோயிலின் இன்று மதியம் கூடிய அந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

விலங்குகளையும் சுற்றுச்சூழலையும் நேசிக்கும் தாங்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாக ஹரியானா பர்யாவரன் ஆம் ஜீவ் ரக்ஷா விஷ்னோய் சபா அமைப்பின் பொதுச் செயலர் வினோத் கர்வசாரா பிபிசியிடம் கூறியுள்ளார்.

“இதற்காக நாங்கள் இருபது ஆண்டுகள் போராடினோம். அதிகாரம் மிக்கவர்களால் கலை மான்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க ஆயிரக்கணக்கான விஷ்னோய் சமூக மக்கள் பங்கேற்ற போராட்டம் 2017இல் ஜோத்பூரில் நடந்தது,” என்று அவர் தெரிவித்தார்.

சல்மான் கானுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதை நினைத்து மட்டும் அவர்கள் திருப்தியடையவில்லை. பிற இந்தி நடிகர்கள் இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடுமையான சட்டதிட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதும், அழியும் நிலையில் இருக்கும் இந்த விலங்குகளை தங்கள் பொழுதுபோக்கிற்காக கொல்பவர்களைத் தடுக்கும் வகையில் சல்மானுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

விலங்குகளையும் இயற்கையையும் நேசிக்கும் தங்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு தீபாவளிப் பண்டிகை என்று ஃபதேகாபாத்தில் உள்ள விஷ்னோய் மகாசபையின் செயலர் மகாவீர் பிரசாத் கூறியுள்ளார். -BBC_Tamil