சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் வாழ்த்து… ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிப்பு!

சென்னை: காமன்வெல்த் போட்டியில் பளு தூக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சதீஷின் சாதனையை பாராட்டும் விதமாக அரசு சார்பில் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்தியா சார்பில் இதுவரை 3 வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

இன்றைய போட்டியின் போது ஆடவருக்கான பளு தூக்குதல் பிரிவில் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்தின் சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் சதீஷ் சிவலிங்கத்தின் சாதனைக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சதீஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளதோடு ரூ. 50 லட்சத்திற்கான உதவித்தொகையும் அறிவித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: