காவிரிக்காக திமுக போராட்டம் நடத்துவது வேடிக்கையாக இருக்கிறது – சீமான்!

நாகூர் : காங்கிரஸ் கூட்டணியில் 10 ஆண்டுகள் இருந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தற்போது திமுக போராடுவது வேடிக்கையாக உள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய தடை கோரி நேற்று போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது : காவிரி பிரச்னை கடந்த 2 ஆண்டுகளாக வந்தது இல்லை. காவிரி பிரச்னை நாம் பிறந்ததில் இருந்தே பார்த்து வருகிறோம். இப்போது பாஜக அரசு மத்தியில் உள்ளது, கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியில் இருந்தது.

அன்றும் இதே காவிரி மேலாண்மை வாரியப் பிரச்னை இருந்தது. அப்போது என்ன தீர்வு எட்டப்பட்டது. நாங்கள் போராடுகிறோம் என்றால் அதிகாரமற்றவர்கள் என்பதால் போராடுகிறோம், அதிகாரத்திற்கு போனதே இந்த பிரச்னைக்குத் தீர்வு காணத் தான். அப்போது தீர்வு காணாமல் இப்போது நடைபயணம், போராட்டம், மறியல் என்று சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கிறது. இப்போது திமுக தைரியமாக சொல்லுமா மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைந்தால் மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று சொல்லுமா.

போராட அனுமதிக்க வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியத்தை தமிழக அரசு பெற்றுத் தரவில்லை என்பதால் தான் மாணவர்களும், இயக்கத்தினரும் போராட்ட களத்தில் இறங்கினர். அவர்களாக போராடி பெற்றுக் கொள்ளட்டுமே என்று கூட அரசு விடாமல் வழக்கு போடுகிறது, மெரினா கடற்கரையில் போராட தடை விதிக்கிறது. மெரினாவில் போராட அனுமதி கொடுத்துப் பாருங்கள் உலகமே திரும்பிப் பார்க்கும் போராட்டத்தை நடத்தி காவிரி மேலாண்மை வாரியத்தை பெறுவோம்.

அதிமுக போராட்டம் எதற்காக

அதிமுக பெயருக்கு உண்ணாவிரதம் நடத்தி உள்ளது. அதிமுக நடத்திய உண்ணாவிரதத்தால் என்ன பயன் கிடைத்துவிட்டது. ஐபிஎல் விளையாட்டை நடத்தக் கூடாது, தமிழகம் கொந்தளிக்கும் இந்த நேரத்தில் ஐபிஎல் எங்களுக்கு வேண்டாம். மீறி ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் எங்களின் எதிர்ப்பை எந்த விதத்தில் வெளிக்காட்ட வேண்டுமோ அப்படி வெளிக்காட்டுவோம்.

வளத்தை அழிக்கலாமா

நிலக்கரிக்கோ துறைமுகத்திற்கோ நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஒரு முதலாளி லாபமடைவதற்காக இந்த மண்டலத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களுமே புற்றுநோய், சுவாசப் பிரச்னை, தோல் நோய்க்கு ஆளாகின்றனர். இது தான் கடலூர் சிப்காட், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எல்லாமே இப்படித் தான். அங்கு போய் வாழ்ந்து பார்த்தால் தான் தெரியும். வளர்ச்சி என்கிற பெயரில் மண்ணின் வளங்கள் கெடுக்கப்படுகின்றன என்பது தான் உண்மையான விஷயம். அதனால் தான் காரைக்கால் தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை இறக்குகிறோம்.

சூரப்பா நியமனம் ஏன்?

காவிரி பிரச்னையை திசைதிருப்புவதற்காக கன்னடர் ஒருவர் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக அரசின் இயலாமை தான் காரணம். தமிழகம் மீது பாஜகவின் மேலாதிக்கம் இருப்பதைத் தான் இது காட்டுகிறது என்றும் சீமான் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: